இன்றைய லாரிகள் வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் பங்கேற்குமா என்பதில் குழப்பம்
சென்னை : இன்று நடைபெறவுள்ள, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பங்கேற்குமா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள், தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் சத்ய பிரதா சாஹூவை சென்னையில் சந்தித்துப் பேசினர்.
அப்போது, லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து உயர்மட்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட லாரி உரிமையாளர்கள், இன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தனர். தமிழகத்தில் வழக்கம் போல் மூன்றரை லட்சம் லாரிகள் ஓடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தமிழத்தில் உள்ள வேன்கள் மற்றும் கால் டாக்ஸிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என்றும் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், வேலைநிறுத்த போராட்டம் திட்டமிட்டபடி தொடங்கும் எனவும் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சரக்கு போக்குவரத்துக்கான பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாக லாரி புக்கிங் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதனால் இன்று தொடங்கும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் பங்கேற்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.