திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... டெல்டா டூ புதுவை வரை இடி முழக்கத்துடன் வெளுத்து வாங்கிய மழை!
தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் மக்கள் மகிச்சியடைந்துள்ளனர்.
சென்னை : தமிழகம் முழுவதும் வறண்டு கிடந்த நிலையில் நேற்று இரவு முதல் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருவது மக்கள் மனதில் ரம்யத்தையும் குதூகுலத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் இந்த ஆண்டு ஏரி, குளங்கள் வறண்டு அன்றாட பயன்பாட்டிற்குக் கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்கள் முதல் பாண்டிச்சேரி கடற்பகுதியை ஒட்டியுள்ள வட தமிழக உள்மாவட்டங்கள் அனைத்தும் பரவலாக மழையை பெற்றுள்ளது. இரவு நேரத்தில் பயணித்தவர்காள் இந்த மழையை ரசித்துச் சென்றுள்ளனர்.
|
மழை அப்டேட்
டெல்டா பகுதிகளிலும் இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்குவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணமாலை மாவட்டத்தில் அதிகாலை 2.30 மணி வரை 88 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதே போன்று பாண்டிச்சேரியிலும் 49 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
|
பை பாஸ் சாலையை நனைத்த மழை
புதுக்கோட்டை, வேலூர்,காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. திடீரென பெய்த மழையால் சில போக்குவரத்து இடையூறுகள் இருந்தாலும், மழையின் தேவையை உணர்ந்துள்ளனர் மக்கள். செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் பெய்த மழையை புகைப்படமாக வெளியிட்டுள்ளார் நெட்டிசன் ஒருவர்.
|
சென்னை புறநகர்ளில் ஜில்ஜில்
காட்பாடியில் நேற்று இரவு நல்ல மழை பெய்துள்ளது. இதே போன்று சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக பெய்துள்ள மழையை அப்டேட்டுகளாக நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
|
டெல்டாவை குளிர்வித்த மாமழை
வடதமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுமார் 7 மணி நேரம் விடாமல் மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் டுவீட்டியுள்ளார். டெல்டா பகுதிகளில் மழை பெய்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பலரும் டூவிட்டி வருகின்றனர்.
|
வந்துட்டேன்னு சொல்லு
மழை வராதா என்று காத்துக்கிடந்தவர்களும், இறைவனிடம் வேண்டுதல் வைத்தவர்களுக்கும் பலன் தந்துள்ளது மழை. இந்த மகிழ்ச்சியை கபாலி பட சூப்பர்ஹிட் டயலாக்குடன் ஒப்பிட்டு டூவிட்டியுள்ளார் நெட்டிசன் ஒருவர். வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு 2 வருஷம் முன்னாடி எப்படி போனேனோ அப்படியே வந்துட்டேன் என்று குஷியாக பதிவிட்டுள்ளார்.