கடத்தலில் மீட்ட சிலைகளை போலீசாரே விற்ற வழக்கு... ஐ.ஜி.பொன்மணிக்கவேல் ஆஜராக கோர்ட் உத்தரவு
சிலைக் கடத்தல் கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்ட சிலைகளை போலீசாரே கள்ள மார்க்கெட்டில் விற்ற வழக்கில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மணிக்கவேல் ஆஜராகி பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சிலைக் கடத்தல் கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்ட சிலைகளை போலீசாரே விற்பனை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மணிக்கவேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டையில் மீட்கப்பட்ட சிலைகளை போலீசாரே விற்றதாகக் கூறப்படும் வழக்கில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலை கடத்தல் குறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் காவலர் ஒருவர் எழுதிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, வழக்கறிஞர் ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அருப்புக்கோட்டை சிலை
அவர் அளித்துள்ள மனுவில், அருப்புக்கோட்டை அருகே ஆலடிப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் தோண்டியபோது, 6 சிலைகள் கிடைத்ததாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
போலீசாரே சிலைகளை விற்றனர்
அந்த சிலைகளை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர், சிலைகளை 6 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், இது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விற்றவர்களுக்கு பதவி உயர்வு
சிலைகளை விற்பனை செய்த காதர் பாட்ஷா தற்போது டி.எஸ்.பி யாகவும், சுப்புராஜ் ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில், அவர்கள் மீதான வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
ஐஜி ஆஜராக உத்தரவு
இந்த மனு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் ஜூன் 29ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.