தேவர் திருமகனாரின் 107வது ஜெயந்தி விழா - தமிழகம் முழுவதும் தலைவர்கள் மரியாதை
சென்னை: தேவர் திருமகனாரின் 107வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் கட்சித் தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவப் படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மலரஞ்சலி செலுத்தினார்.
இதேபோல், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வீட்டில் இருந்தபடியே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக...
இதேபோல், சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள்...
அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பாஜக...
பாஜக சார்பில் வானதி சீனிவாசன் தொண்டர்கள் உடன் சென்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
காங்கிரஸ்...
முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன், தற்போதைய காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் கராத்தே தியாகராஜன் ஆகியோர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.