அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்கிறதா தமிழக அரசியல்?
எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் அழைத்துள்ளதால் தமிழக அரசியல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுக சட்டசபை தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அழைத்துள்ளார். இதனால் தமிழக அரசியல் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஓபிஎஸ் அணிக்கும் சசிலா அணிக்கும் ஏற்பட்ட மோதலால் முதல்வர் நாற்காலி யாருக்கு என்ற குழப்பம் கடந்த 10 நாட்களாக தமிழக அரசியலை ஆட்கொண்டிருந்தது. இந்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென அழைத்துள்ளார்.
நேற்றிரவு எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் தற்போது ஆளுநரே அவரை அழைத்திருப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.
இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒரு புறம் ஓபிஎஸும் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனால் 10 நாட்களுக்கும் மேலாக யார் முதல்வர் என்ற இழுபறி நிலவி வந்த நிலையில் அதற்கு இன்று முடிவு தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.