விடிய விடிய சென்னையில் கன மழை... தீவிரமடைந்தது வடகிழக்குப் பருவ மழை
சென்னை: தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு மழை தீவிரமடைந்துள்ளதாகவும், இதுவரை இயல்பை விட 33 சதவீத மழை அதிகமாக கிடைத்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வங்கக் கடலில் மன்னர் வளைகுடா பகுதியில் காற்று மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அனேக இடங்களில் இன்று கன மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனை உறுதி செய்வது போல், சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தீவிரம்...
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, நெல்லை மாவட்டம் நான்குநேரியில், 11, சேரன்மாதேவியில், 10 செ.மீ., மழை பதிவாகி இருந்தது.
கனமழைக்கு வாய்ப்பு...
தென்மேற்கு வங்கக் கடலில், இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில், உருவான காற்று மேலடுக்கு சுழற்சி, தற்போது, மன்னர் வளைகுடா அருகில் நிலை கொண்டுள்ளது,இதனால், தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும். தென் தமிழகத்தில், ஒருசில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யும். வடதமிழகத்தில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு.
இடியுடன் மழை...
சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உண்டு' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை...
நேற்று அதிகாலை முதல் சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, போரூர், பூந்தமல்லி, கிண்டி, சைதாப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வியாசர்பாடி, எம்.கே.பி., நகர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு...
தொடர் மழை காரணமாக சாலைகளில் மழைநீர் கரை புரண்டு ஓடுவதால் ஆங்காங்கே போக்குவரத்தும் பாதிக்கப் பட்டுள்ளது. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப் பட்டுள்ளது. பெரும்பாலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
விடுமுறை...
தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
உயிரிழப்பு...
இத்தொடர் மழைக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இடி, மின்னல் மற்றும் மின்சாரம் தாக்கி காயமடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.