பத்தாயிரம்தான் தருவோம்., பல தவணையாதான் சம்பளம்.. தமிழக தலைமைச் செயலக ஊழியர்களுக்கே இதுதான் நிலை
தலைமைச் செயலக ஊழியர்களுக்கு தவணை முறையில் சம்பளம் வழங்கும் நிலைக்கு வங்கிகள் தள்ளப்பட்டுள்ளன.
சென்னை: தமிழக தலைமைச் செயலக ஊழியர்களும், ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் அவதியை சந்தித்துள்ளனர்.
சென்னை கோட்டையில் இயங்கிவரும், தலைமைச் செயலகத்தில் சுமார் 5 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்கள் வசதிக்காக பிரத்யேகமாக, தலைமைச் செயலக வளாகத்தில் சில வங்கிகள் இயங்கி வருகின்றன. இன்று ஊதிய நாள் என்பதால், தலைமைச் செயலக ஊழியர்கள் பலரும் வங்கிகளுக்கு படையெடுத்தனர்.
ஏ.டி.எம்களில் நாளொன்றுக்கு, ரூ. 2000 மட்டுமே எடுக்க முடியும் என்பதால், குடும்ப தேவையை பூர்த்தி செய்ய, தலைமைச் செயலக ஊழியர்கள் வங்கிகளுக்குப் போய் பணத்தை எடுக்க முயன்றனர்.
ஆனால், அங்கே சம்பளப் பணம் முழுவதையும் எடுக்க முடியவில்லை. ஒருவருக்கு அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம்தான் தரமுடியும் என்று வங்கிகளில் கூறிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த, தலைமைச் செயலக ஊழியர்கள், தங்கள் சங்க செயலாளர் கணேசனிடம் இதுபற்றி முறையிட்டனர்.
இதையடுத்து, கணேசன், வங்கித்தரப்பினருடன் பேசியுள்ளார். கூடுதல் பணம் கொடுக்குமாறு பேசி பார்த்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகளோ தங்கள் நிலையே மோசமாக இருப்பதாக கூறி கைவிரித்துவிட்டனர். தங்களுக்கு ரிசர்வ் வங்கி தந்தது முப்பது லட்சம்தான் என்றும், தாங்கள்தான், கூடுதலாக வேண்டும் என்று அடம்பிடித்து 60 லட்ச ரூபாயை வரவழைத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பள பணத்தை தவணையாக தர வேண்டிய நிலையில்தான் தாங்கள் இருப்பதாக வங்கி அதிகாரிகள் கைவிரிக்க, இப்போது, மத்திய அரசு மீது அதிருப்தியிலுள்ளார்களாம், தலைமைச் செயலக ஊழியர்கள். மாநில விவகாரங்களை கையாளும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கே கடைசில இப்படி, விபூதி அடிச்சிட்டாங்களே!