சென்னையில் தொடங்கியது தமிழக- இலங்கை மீனவர் இடையேயான 3வது கட்ட பேச்சுவார்த்தை!
சென்னை: தமிழக - இலங்கை மீனவ பிரதிநிதிகள் பங்கேற்றுள்ள 3வது கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்கி கைது செய்து வருகிறது. மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வருகிறது.
அத்துடன் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் இருதரப்பு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை இரு கட்டமாக நடைபெற்றது.
சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 27 -ந் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தையும், மே 12-ந் தேதி கொழும்பில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றன. இந்த இரு கூட்டங்களிலும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை
இதனைத் தொடர்ந்து 3-ம் கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தமிழக அரசின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட மத்திய அரசும், இலங்கை அரசும் சென்னை பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக் கொண்டன.
இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 54 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 54 மீனவர்களையும் விடுவித்தால்தான் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். மேலும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசும் நீதிமன்றங்களுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று தமிழக- இலங்கை மீனவர்களிடையேயான 3வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவல்காத்தில் இன்று இப்பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் இலங்கை அரசின் மீன்வளத்துறை இயக்குநர் பெர்னாண்டோ தலைமையில் மீனவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி சதாசிவம் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
தமிழகம், காரைக்கால், புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அத்துடன் தமிழக அரசு பிரதிநிதிகளும் இப்பேச்சுவார்த்தையில் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.