நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்ட ‘கலாம் சாட்’ செயற்கைகோள்... தமிழக மாணவருக்கு குவியும் பாராட்டுகள்!
நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்ட கலாம் சாட் செயற்கைகோளை வடிவமைத்த தமிழக மாணவர் ரிஃபாத் ஷாரூக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னை : கரூரைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவர் ரிஃபாத் ஷாரூக் வடிவமைத்த கையடக்க செயற்கைகோள் நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து சட்டசபையில் மாணவனுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவன் முகமது ரிஃபாத் ஷாரூக் தற்போது பனிரெண்டாம் வகுப்பு முடித்துள்ளார். படிப்பில் சுமாரான மாணவர் தான் என்றாலும் அவரது கண்டுபிடிப்பு இன்று உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
புதிய தொழில்நுட்ப செயற்கைகோள்
ரிஃபாத் ஷாரூக் ஒரு போட்டிக்காக கலாம் சேட் என்ற கையடக்க செயற்கைகோளை கண்டுபிடித்துள்ளார். நாசா மற்றும் ‘I Doodle Learning' நடத்திய ‘Cubes in Space' என்ற போட்டிக்காக அவர் 3டி ப்ரிண்டிங் மூலம் புதிய தொழில்நுட்பத்தில் இதனை உருவாக்கியுள்ளார்.
குறைவான எடை
3டி ப்ரிண்டிங்காலான கார்பன் ஃபைபரின் செயல்பாடுகளை விளக்குவதே இதன் சிறப்பு. புதுவகை ஆன்-போர்ட் கணினி மூலம் எட்டு உள்ளடக்கப்பட்ட சென்சார்கள், பூமியின் வேகவளர்ச்சி, சுழற்சி மற்றும் மேக்னெடோஸ்பியரை அளவிட உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள செயற்கைகோள் 3.8 கன சென்டிமீட்டர் உயரமும், 64 கிராம் எடையும் கொண்டது.
விண்ணில் செலுத்தியது நாசா
ரிஃபாத் உருவாக்கிய கலாம் சேட் வாலப்ஸ் தீவில் உள்ள நாசா மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோளை பார்த்து ரிஃபாத் தன்னுடைய நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.
கொண்டாட்டம்
ரிஃபாத்துடன் அவரது 6 நண்பர்களும் இணைந்து கலாம் சாட்டை உருவாக்கியுள்ளனர். தாம் உருவாக்கிய செயற்கைகோள் நாசா மூலம் விண்ணில் செலுத்தப்பட்டதைக் கண்டு மகிழ்ச்சியில் ரிஃபாத் துள்ளி குதித்துள்ளார்.
|
குவியும் பாராட்டுகள்
விஞ்ஞான அறிவில் தமிழக மாணவர்கள் குறைந்தவர்கள் இல்லை என்பதை கரூரைச் சேர்ந்த மாணவன் ரிஃபாத் நிரூபித்துள்ளார். ரிஃபாத்தின் சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதிமுகவைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சட்டசபையில் ரிஃபாத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.