நீட் தேர்வை எதிர்த்து வீதிக்கு வரும் மாணவர்கள்... மே 5-ல் மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம்!
நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மே 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
சென்னை: நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மே 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து இந்த ஆண்டு வரும் மே மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை
இந்நிலையில் இந்த ஆண்டு 23 புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டு, 2,200 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, நாமக்கல், வேலுார் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதற்காக வரும் மே 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசைக் கண்டித்து அன்றைய தினம் தமிழகம் முழுவதும் வாகன பேரணி நடத்தப்படும் என்றும் மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.