திமுக, அதிமுக மீது கோபம்.. கம்யூனிஸ்டுகள் இருப்பதால் ம.ந.கூட்டணிக்கு வணிகர் சங்கங்கள் ஆதரவு?
சென்னை: தமிழகத்தின் மிகப்பெரும் சமூகமான வணிகர்கள் எந்தக் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்து இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்பு உச்சத்தில் உள்ள நிலையில், ஆளும் அதிமுகதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஒரு டிவி சேனலும், திமுக கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று இன்னொரு டிவி சேனலும் கருத்துக்கணிப்பு வெளியிட்டு இன்னும் கொஞ்சம் சூட்டை கிளப்பியுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தின் மிகப்பெரும் சமூகமான வணிகர்கள் எந்தக் கட்சி கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தீர்மானித்து இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுக, அதிமுக ஆதரவு
த.வெள்ளையன் தலைமையிலான, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகிய இரண்டு பெரிய அமைப்புகளும் வழக்கமாக, அதிமுக அல்லது திமுக கட்சிகளுக்கு தங்களின் ஆதரவை வழங்கிவருகின்றன.
கடந்த தேர்தல்
கடந்த 2011ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவிற்கு தங்களின் ஆதரவை வெள்ளையன் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அளித்தது. விலைவாசி, மின்வெட்டு போன்றவை வணிகர்களை பாதிப்பது, திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க செய்தது.
ஆன்லைன் வர்த்தகம்
தற்போதைய நிலை குறித்து வெள்ளையன் கூறுகையில், உலக வர்த்தக ஒப்பந்தம் மூலமாக அனைத்து துறைகளிலும் அந்நிய ஆதிக்கம் ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது. சில்லறை வணிகத்தை ஒட்டு மொத்தமாக வெளிநாட்டினர் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய ஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளனர்.
கண்டனம், கவலை இல்லை
இதனால், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சில்லறை வணிகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இருப்பினும், மாநில கட்சிகள் இது குறித்து கண்டனம் தெரிவிக்கவில்லை, கவலைப்படவும் இல்லை என்று வெள்ளையன் குற்றம்சாட்டியுள்ளார்.
அறிவிப்பு
வரும் சட்டசபை தேர்தலில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு அளிக்கும என்று வெள்ளையன் தெரிவித்துள்ளார். வரும் 5ம் தேதி மேல்மருவத்தூர் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் 33 வது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அதில் சட்டமன்றத் தேர்தலில் வணிகர்களின் ஆதரவு எந்தக் கூட்டணிக்கு என்பதை வெள்ளையன் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோவில்பட்டி மாநாடு
அதே போல கோவில்பட்டியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில், வரும் 5ம் தேதி வணிகர்களின் மாநில மாநாடு நடைபெறுகிறது. அது குறித்து விக்கிரமராஜா கூறுகையில், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்தவித உதவியும் செய்யவில்லை. கோவில்பட்டியில் மே 5ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாடு நடக்கிறது. வணிகர்களின் மனநிலை குமுறல், மே 16ம் தேதி நடக்கும் சட்டமன்ற தேர்தலின்போது எதிரொலிக்கும்".
மார்க்சிஸ்ட் கோரிக்கை
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்," மக்கள் நலக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் வணிகர்களின் நலனைக் காக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது தவிர உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். எனவே தேமுதிக-தமாகா- மக்கள் நலக் கூட்டணிக்கு தமிழக வணிகர்கள் ஆதரவு தர வேண்டும் " என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பத்து லட்சம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைஅமைப்பில், 10 லட்சம் வணிகர்கள் இருக்கிறார்கள்.அதனால் எங்களின் முடிவு அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியமானது என்று அவ்வமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
மக்கள் நல கூட்டணி
வணிகர் நலன் காக்க திமுக, அதிமுக உதவவில்லை என்ற குமுறல் வணிகர்களிடம் உள்ளது. எனவே கம்யூனிஸ்டுகள், மதிமுக அடங்கியுள்ள மக்கள் நல கூட்டணி, தேமுதிக கூட்டணிதான், வணிகர்களுக்கு உதவும் என்ற மனநிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் நல கூட்டணிக்கு, இவ்விரு வணிகர்கள் சங்கங்களும் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.