விவசாயிகளுக்கு வேட்டு.. ஓவியாவுக்கு ஓட்டு.. தமிழக இளைஞர்கள் போகும் பாதை சரிதானா?
சென்னை: விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்தபோது கிடைத்ததைவிட அதிகப்படியான பெயரை பிக்பாஸ் நிகழ்ச்சி ஓவியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் எங்கெங்கிலும் நீக்கமற நிறைந்துள்ளார் ஓவியா. '#OviyaArmy' என்ற பெயரில் ரொம்பவே உக்கிரமாக இயங்கி வருகிறார்கள் ரசிக சிகாமணிகள்.
ஓவியா ஆர்மி மட்டுமல்லாது, ஓவியா தற்கொலைப் படையும் உருவாகினால் நாட்டு நிலை என்னவாகும், இந்த உலகம் எங்கேபோகும் என அதிரி, புதிரியாக யோசித்தன் விளைவுதான் பின்வரும் தகவல்கள்.
பலம் பொருந்திய ராணுவம்
இஸ்ரேல் ராணுவப் படைப்பிரிவுக்கு அடுத்தாற் போன்று பலம்பொருந்திய ராணுவ அமைப்பான "ஓவியா ஆர்மி" க்கு கிளைப்பிரிவுகளாக, "ஓவியா காலாட்படை, ஓவியா கடற்படை, ஓவியா வான் பாதுககாப்பு படை" போன்ற படைப்பிரிவுகள் வெற்றிகரமாக இயங்கிவருவது தாங்கள் அறிந்ததே.. இதன் தொடர்ச்சியாக, "ஓவியா தற்கொலைப் படை" பிரிவு ஒன்று டால்லஸில் ஆரம்பிக்கப்பட்டு, துரித கதியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது.
உணர்ச்சிமிக்க கோஷங்கள்
ஆத்தா, அப்பாவை பிரிந்து டால்லஸில் வாடும் இளைஞர்கள், தங்கள் குலதெய்வமாக ஓவியாவை ஒருமனதாக ஏற்று கொண்டு, "சேவ் ஓவியா", "கொக்கு நெட்ட கொக்கு", "நீங்க ஷட்டப் பண்ணுங்க" போன்ற உணர்ச்சிமிக்க கோஷங்களை எழுப்பியவாறு "ஓவியா வாழ்க" என்று ரத்த திலகமிட்டு தங்களை ராணுவத்தில் இணைத்து கொண்ட வரலாற்று நிகழ்வு போன வாரம் அரங்கேறியது. உணர்ச்சிவசப்பட்ட நண்பர் ஒருவர் "உயிர் மண்ணுக்கு, உடல் ஓவியாக்கு" என்று மாற்றி கோஷம் போட்டபோது, அனைவரும் புல்லரித்து போனார்கள். ஜாக்சன்வில்லில் இருந்து இன்னொரு படைப்பிரிவு இணைய வந்து கொண்டிருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னபோது, அங்கேயே கிளைப்பிரிவு ஆரம்பிக்க ஆலோசனை சொல்லப்பட்டது.
டால்லஸில் எதிரொலிக்கும்
அமைப்பின் முதல்கட்ட நிகழ்வாக, "களவாணி, கலகலப்பு, சண்டமாருதம்" போன்ற ஓவியா நடித்த திரைக்காவியங்கள் அடுத்த வாரம் திரையிடப்படும் என்ற அறிவிப்பினை கேட்டு அனைவரும் மகிழ்ந்தார்கள். வந்தவர்களுக்கு "சேவ் ஓவியா" டிஷர்ட்டுகளும், பனானா, கிரின் டீ பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, அடுத்த வாரம் ஆரம்பிக்கப்பட இருக்கும் "கட்டிப்பிடி புகழ் ஜூலீ" ஆர்மிக்கு கடுமையான எச்சரிக்கையையும், பிக்பாஸில் தலைவி மேல் கை என்ன மூச்சுக்காற்று பட்டால், டால்லஸில் கடையடைப்பு, பந்த், தீகுளிப்பு சம்பவங்கள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்தாக ஆர்மி கேப்டன் தெரிவித்தார். மிகவும் பெருமையாக இருக்கிறது என்று நண்பன் ஒருவரிடம் சொன்னபோது, அவர் கூறிய கருத்து என்னை ஒரு நிமிடம் உலுக்கி போட்டது. "இதெல்லாம் பெருமையா கடமை. இன்னிக்கு ஓவியாக்கு நம்ம ராணுவம் ஆரம்பிக்கிறோம். நாளைக்கு நம்ம பசங்க ஓவியா மகளுக்கு ஆரம்பிப்பாய்ங்க.. அப்புறம் நம்ம பேரப் பசங்க, ஓவியா பேத்திக்கு.. ஆனா விதை நம்ம போட்டது.!
ஓவியாவுக்கு ஓட்டு போட்டியா?
இரண்டாம் உலகப்போரின் போதும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போதும், எமெர்ஜென்சி காலத்திலும் கூட, தமிழர்கள் இவ்வளவு சோதனைக்குட்பட்டதில்லை. சாப்பிடும்போதும், தூங்கும்போதும், சமைக்கும்போதும், ஜெபிக்கும்போதும், இரண்டு நண்பர்கள் சந்திக்கும்போதும், விளையாடும்போதும், காலையில் ஆய் போகும்போதும் கூட பெரும்பாலான தமிழர்களின் மனதை அரித்துக்கொண்டிருக்கும், ஒரே கேள்வியாக மாறிப்போயிருக்கிறது. "ஓவியாவிற்கு ஓட்டு போட்டியா..." "ஓவியாவிற்கு ஓட்டு போட்டியா..."
போனில் கூட பேசுவதில்லை
ஒவ்வொரு இரவையும் தமிழ்நாடு பதட்டத்தோடே கடப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு தொலைபேசினால் "நல்லா இருக்கியா" என்ற சம்பிரதாய கேள்விக்கு முன்பு "ஓவியாவை டார்ச்சர் பண்றாய்ங்கடா" என்ற வார்த்தையை எதிர்கொள்வதாக பல நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் இரவு 8.30 - 10.00 மணிக்கு வழக்கமாக அழைக்கப்படும் தொலைபேசிகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதை கண்டு செல்போன் நிறுவனங்கள் தலையை பிய்த்து கொண்டு அலைவதாக கேள்வி. அடப்பாவிகளா...விவசாயிகளை விட, கதிர்காமங்களத்தைவிட, நெடுவாசலைவிட பிக்பாஸ் முக்கியமாடா, "சேவ் பார்மர்" டாக்கை டிரண்ட் பண்ணுங்கடா என்று ஒரு கூட்டம் கதறினால் கூட , சரி "சேவ் பார்மர்" என்று கூறி விட்டு "இந்த காயத்ரி இருக்காளோன்னா..." என்று கடந்து செல்லும் கூட்டத்தை பார்த்து திகைத்து போவதாக தகவல்.
செண்டிமெண்ட் அதிகம்
எப்படி இது சாத்தியம். ஜல்லிக்கட்டு போன்ற உணர்ச்சி மிகுந்த போராட்டத்திற்கு அப்புறம் எவ்வளவுதான் போராடுங்கள் என்று பல களங்கள் வந்தாலும், "சேவ் ஓவியா" விற்கு தமிழன் போராட வேண்டிய கட்டாயங்களுக்கு எப்படி ஆளாக்கப்பட்டான். பொதுவாக நமக்கும் (தமிழர்களுக்கும்) மற்ற மாநிலத்தவர்களுக்கும் நடுவே உள்ள பெரிய கலாச்சார வித்தியாசம், ரமணா படத்தில் சொல்வது போல "வி ஆர் செண்டிமெண்ட் இடியட்ஸ்". யாராவது அழுதால் நாமும் அழுதுவிடுவோம், சீக்கிரம் உணர்ச்சிவசப்படுவோம். தன்மானத்திற்கு எதையும் செய்வோம் (ஜூலிக்கள் இதற்கு விதிவிலக்கு).
அப்படியே விடுவோம்
இதை குறி பார்த்து அடித்தால், தமிழர்களில் மனத்தை விட்டு அவ்வளவு சீக்கிரம் வெளியே போகமுடியாது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல. இதைத்தான் விஜய்.டி.வி சரியாக செய்திருக்கிறது.குறி பார்த்து அடித்திருக்கிறது. இளைஞர்களுக்கு இதுதான் பிடித்திருக்கிறது. இதை இப்படியே விட்டுவிடுவதுதான் நலம். மாறாக அவர்களை, கையை, காலையும் கட்டி போட்டுவிட்ட மாதிரி "சேவ் பார்மர்ஸ்", "சேவ் கதிராமங்கலம்" என்று கோஷம் போடச்சொன்னால், கடமைக்கு ரெண்டு கோஷம் போட்டுவிட்டு அடுத்தவேலையை பார்க்க சென்றுவிடுவான்.
எழுச்சி தானாக வரட்டும்
எழுச்சி போராட்டம் என்பது தன்னெழுச்சியாக வருவது. யாரும் தூண்டிவிட்டு வருவதல்ல. அப்படி யாரும் தூண்டி விட்டாலும் எழுப்பப்படும் கோஷம், வெற்று கோஷமாகவே இருக்கும். அப்படியென்றால், இப்படித்தான் இருக்குமா என்றால். ஆம், இப்படித்தான் இருக்கும். அவனுக்கு மனதில் ஆழமாக பதியும் வரை இப்படித்தான் இருக்கும். அதை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும். அவனுக்கு சேவ் பார்மர்ஸை விட பிக்பாஸ் பிடித்திருக்குதென்றால் விட்டுவிட வேண்டும். அதைவிட்டு விட்டு, நீ இதற்குதான் முக்கியத்துவம் தரவேண்டும், இப்படித்தான் கோஷம் போடவேண்டும் என்று நிர்பதிந்தால், ஒரே வார்த்தையில், சொல்லிடுவான். "நீங்க ஷட்டப் பண்ணுங்க..".
இப்படி தனது கருத்தை பதிவு செய்துள்ளார் நமது 'ஒன்இந்தியாதமிழ்' இணையதளத்தின் அமெரிக்க வாசகர் விக்டர்.