கர்நாடகாவில் அசாதாரண நிலை.. அச்சத்தில் தொடர்ந்து வெளியேறும் தமிழர்கள்
ஓசூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடக கட்சிகளும், அரசும் தொடர்ந்து பிடிவாதம் செய்து வருவதாலும், மீண்டும் பெரும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்ச நிலை நீடிப்பதாலும் அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் தமிழர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஓசூர் எல்லையிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலரும் குடும்பம் குடும்பமாக வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 27ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் காவிரி வழக்கு விசாரணைக்கு வரும்போது கர்நாடகத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அப்படி நேரும்போது தமிழர்களுக்கு எதிராக வன்முறை வெடிக்கலாம் என்ற அச்ச நிலை நிலவுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழர்கள் இறங்கியுள்ளனர். பலர் தமிழகத்திற்கு இடம் பெயர ஆரம்பித்துள்ளனர்.
செப்டம்பர் 6ம் தேதியிலிருந்து
கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வேறு வழியில்லாமல் கனத்த இதயத்துடன் தருவதாக கூறி கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் கடும் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரில் 12ம் தேதி பெரும் கலவரம்
இந்த போராட்டங்களின் உச்சகட்டமாக கடந்த 12ம் தேதி பெங்களூரில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழக பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. கேபிஎன் பேருந்துகள் கூண்டோடு தீவைத்து எரிக்கப்பட்டன.
தமிழர்கள் வெளியேறுகிறார்கள்
இந்த கோர வன்முறை வெறியாட்டத்தைத் தொடர்ந்து தமிழர்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். பெங்களூரு மட்டுமல்லாமல் மைசூரு, சாம்ராஜ் நகர், கோலார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். அத்திப்பள்ளி வழியாகவும், பிற எல்லைப் பகுதி வழியாகவும் தமிழர்கள் வெளியேறுவதாக கூறப்படுகிறது.
கர்நாடக அரசின் அலட்சியம்
கர்நாடக கட்சிகளுடன் சேர்ந்து கர்நாடக அரசும் தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிராக திரும்பியுள்ளது. காவரியிலிருந்து தண்ணீர் தர முடியாது என்று தீர்மானமே போட்டு விட்டனர் சட்டசபையைக் கூட்டி. எனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு 27ம் தேதி வரும்போது கர்நாடகம் கடுமையான வசவுகளுக்கு ஆளாகும் என்று தெரிகிறது.
செப்டம்பர் 27ம் தேதி
ஒரு வேளை சுப்ரீம் கோர்ட் மிகக் கடுமையான உத்தரவு எதையும் பிறப்பித்தால் கர்நாடக்தில் தமிழர்களுக்கு எதிராக மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.