ஏன், என்னாச்சு.. கமலுக்கு ஏன் இந்த திடீர் ஆர்வம்.. டென்ஷனில் தமிழிசை!
நடிகர் கமல்ஹாசனுக்கு ஏன் திடீர் அரசியல் ஆர்வம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை : தனது துறைக்கு ஆபத்து என்றவுடன் அங்கீகாரத்திற்காக நடிகர் கமல்ஹாசன் அரசியலை கையில் எடுப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களிடையே தீவிரவாதம் ஊடுருவியிருப்பதாகவும் அதன் ஒரு எடுத்துக்காட்டாகவே மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கதாகவும் கூறினார்.
நடிகர் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்த டுவிட்டர் பதிவு குறித்து கருத்து கூறியவர், இவ்வளவு நாள் என்ன சமுதாயப் பார்வையோடு இருந்தார், மக்களுக்காக எந்த அளவு போராடினார். அவருடைய துறையில் அவர் சிறந்து விளங்குகிறார். காசு வாங்கிக் கொண்டு தானே நடிக்கிறார். கலை சேவை செய்கிறேன் இலவசமாக நடிக்கவில்லையே. நடிகர்கள் அரசியல் கருத்து சொல்வதற்கு நான் எதிரியில்லை.
அங்கீகாரம் கிடைப்பதற்காக அரசியலுக்கு வருவதைத் தான் நான் கண்டிக்கிறேன். ரஜினி அரசியலுக்கு வருவதை எதிர்க்கவில்லை என்றால் அதற்கு காரணம் இருக்கிறது, 1996ம் ஆண்டு முதலே சமூகப் பிரச்னைகளுக்கு முன் நின்றவர். நதிகள் இணைப்பு என்று வந்தவுடன் முதல் ஆளாக நிதி கொடுக்க முன்வந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா போல ஆரம்பத்திலிருந்தே அரசியல் களத்தில் ஈடுபட வேண்டும், திடீரென வருவது நல்லதல்ல.
கமலின் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக ஸ்டாலின் ஜனநாயகப் படுகொலை என்று கூறுபவர்கள் எங்கோ பேசியதற்கு சென்னை பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது பற்றி ஏன் வாய்திறக்கவில்லை, என்றும் தமிழிசை கேட்டுள்ளார்.