அணிகள் இணைப்புக்கும் அமித் ஷா வருகைக்கும் தொடர்பில்லை.. தமிழிசை சௌந்தரராஜன்
அமித் ஷா வருகை பாஜகவை பலப்படுத்த மட்டுமேயன்றி, அதிமுக அணிகள் இணைப்பிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக அணிகள் இணைப்பிற்கும் அமித் ஷா வருகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறிய விவரங்கள் : அவரவர் கட்சியில் சில நடவடிக்கைகள் நடந்து வருகிறது. அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மற்றொரு கட்சியின் பலத்தையோ பலவீனத்தையோ பார்த்து நாங்கள் எங்கள் கட்சியை பலப்படுத்தவில்லை.
தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தவே கட்சி ரீதியிலான நடவடிக்கையாக தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகம் வருகிறார். அமித்ஷா வருகை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும், பாஜகவின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவே அவர் வருகிறார். இணைப்பு அதிமுகவிற்குள் நடக்கிறது, ஒரு கட்சியின் இணைப்பு வேறு கட்சித் தலைவர் வருகைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்.
ஜெயலலிதா மரணம் குறித்து தொடக்கம் முதலே மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. ஏனெனில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். சிறப்பான முறையில் செயல்பட்டிருக்கிறார் அவரது மரணத்தில் இருக்கும் சந்தேகங்களை போக்க நீதி விசாரணை நடத்த அரசு முன் வந்திருப்பது சரியான முடிவே.
ஜெயலலிதாவின் சரித்திரத்தில் போயஸ் கார்டன் இல்லம் இல்லாமல் எழுத முடியாது. 50 ஆண்டுகாலம் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது சரியான முடிவே. ஆளுங்கட்சி பிரிவால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது. நாங்கள் யாரையும் பகடைக்காய்களாக உருட்டவில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.