காவிரி ஆற்றின் குறுக்கே அணை... கர்நாடக அரசை கண்டித்து ரயில் மறியல் செய்த தேமுதிகவினர் 500 பேர் கைது
தஞ்சை: கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர் ராமநாதன் தலைமையில் அக்கட்சியினர் பேரணியாக வந்தனர். அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்திய போதும், தடுப்புகளைத் தாண்டி அவர்கள் ரயில் நிலையத்திற்குள் புகுந்தனர்.
பின்னர், நாகூர் ரயிலை மறித்த தேமுதிகவினர், தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட தேமுதிகவினரைப் போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தால் நாகூர் ரயில் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது.