ஜெ. சுகவீனம் எதிரொலி... அதிர்ச்சியில் அதிமுக பிரமுகர் மயங்கி விழுந்து மரணம்
தஞ்சை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலம் சரியில்லை என்பதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தஞ்சையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த வியாழன் அன்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்த டி.மகேந்திரன் (54) அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு மயக்கத்தை தெளிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மயங்கிய நிலையிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த மகேந்திரன் பட்டுக்கோட்டை நகர 11வது வார்டு அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்தவர்.
மகேந்திரனின் மரணம் குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர், அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.