தஞ்சை தேர்தல்… பணப்பட்டுவாடா நடக்குதா… 6 இடங்களில் போலீஸ் தீவிர கண்காணிப்பு
தஞ்சாவூர்: தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தஞ்சையில் 6 இடங்களில் சோதனை மையம் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 17ம் தேதி, அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு தேர்தலையும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் இருந்து இந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதனையடுத்து தஞ்சையில் 6 இடங்களில் சோதனை மையங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். தலைமை காவலர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திருச்சி வழியாக தஞ்சைக்கு செல்லும் நுழைவு வாயில், சென்னை, கும்பகோணம், அரியலூர் வழியாக தஞ்சைக்கு செல்லும் நுழைவு வாயில், நாகப்பட்டினம், திருவாரூர் வழியாக தஞ்சைக்கு செல்லும் நுழைவு வாயில் என தஞ்சையின் முக்கிய நுழைவு வாயில்களில் வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழியாக வரும் 2 மற்றும் 4 சக்கரவாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மே 16 தேதி தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சையில் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனிடையில் திருப்பரங்குன்ற தொகுதிக்கான எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது. ஆக, இந்த 3 தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.