செல்போன் டவர் ஏறிய கம்யூனிஸ்ட் பிரமுகர்.. டாஸ்மாக்கை பூட்டி சாவியை காட்டியபின் இறங்கினார்
தென்காசி: டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி செல்போன் கோபுரம் மீது ஏறி போராடிய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார். முன்னதாக டாஸ்மாக் கடையை பூட்டி சாவியை காண்பித்த பிறகே அவர் செல்போன் கோபுரத்தை விட்டு கீழே இறங்க சம்மதித்தார்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ளது சுந்தரபாண்டியபுரம் கிராமம். இங்கு ஒரே தெருவில் இரண்டு செல்போன் டவர்கள் உள்ளன.
இப்பகுதியை சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சுப்பையா மகன் ஐயப்பன் என்ற கூலித்தொழிலாளி இன்று பகல், 12 மணியளவில் அங்குள்ள செல் போன் டவரில் ஏறி உச்சிக்கே சென்றார். அங்கு சென்றவர் தனது ஊரிலிருக்கும் அரசு டாஸ்மாக் கடையை அடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டார்.
இதுகுறித்து தென்காசி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அரவிந்தன்,தென்காசி தீயணைப்பு துறையினர், சாம்பவர் வடகரை போலீசாருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்தனர். உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் அவரிடம் அப்பகுதியிலுள்ள மதுக்கடையை அடைத்து விடுவதாக கூறினார்.
ஆனால் அவர் ஏற்க மறுத்து உடனடியாக அடைத்து தன்னிடம் கடை சாவியை காட்ட வேண்டும் என்றார்.அதனை ஏற்ற போலீசார் உடனடியாக கடையை அடைத்து சாவியை காட்டினர். அதன்பின் தீயணைப்புத்துறையினர் விரைவாக டவரில் ஏறி அவரை பத்திரமாக மீட்டனர்.
கீழே இறங்கி வந்தவரை காவல்துறையினர் கைது செய்து சாம்பவர் வடகரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக அங்கு சுமார் ஒருமணி நேரம் நீடித்த பரப்பரப்பு முடிவுக்கு வந்தது.
இதனிடையே சாவியை கொடுத்து மீண்டும் டாஸ்மாக்கை திறக்க வைத்தனர் போலீசார். எனவே வியாபாரம் வழக்கம்போல கல்லாகட்டி வருகிறதாம்.