கடையை எப்ப சார் திறப்பீங்க?.. வழக்கம் போல காலையிலேயே குடிக்க வந்த குடிகாரர்கள்!!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முதல் டாஸ்மாக் கடைகளின் திறப்பு நேர மாற்றம் அமலுக்கு வந்தது. பிற்பகல் 12 மணிக்குக் கடைகள் திறக்கப்பட்டன.
ஆனால் இந்த நேர மாற்றத்தைப் பொருட்படுத்தாமல் அல்லது அறியாமல் காலையிலேயே குடிகாரர்கள் கடைக்கு வந்து காத்துக் கிடந்தது பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
தமிழகத்தின் ஒரு பகுதி மக்களை நிரந்தரக் குடிகாரர்களாக்கி விட்டது அரசு. சாதாக் குடிகாரர்கள் இன்று மொடாக் குடிகாரர்களாகி விட்டனர். குடி வாடையே அறியாதவர்கள் கூட இன்று தினசரி குடிக்கும் நிலைக்கு போய் விட்டனர்.
கடை திறப்பு நேர மாற்றம்
இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள அதிமுக அரசு மது விலக்கை படிப்படியாக அமல்படுத்தப் போவதாக கூறியுள்ளது. அதன் முதல் கட்டமாக இன்று முதல் கடைகளின் திறப்பு நேரம் காலை 10 மணிக்குப் பதில் பிற்பகல் 12 மணியாக மாற்றப்பட்டது. மேலும் 500 கடைகளை மூடப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
12 மணி முதல்
இதன்படி இன்று கடைகள் திறப்பு நேர மாற்றம் அமலுக்கு வந்தது. பிற்பகல் 12 மணிக்குத்தான் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆனால் குடிகாரர்கள் மத்தியில் இந்த நேர மாற்றம் எந்த வகையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்று தெரியவில்லை.
காலையிலேயே காத்திருந்த குடிகாரர்கள்
காலையிலேயே வழக்கம் போல பல குடிகாரர்கள் கடைக்கு வந்து காத்திருந்தனர். கடையை எப்ப சார் திறப்பீங்க என்று பலர் ஆர்வத்துடன் கேட்டபடி இருந்தனர்.
கூட்டம் அலை மோதியது
கடை திறப்பு தாமதமானாலும், கூட்டத்திற்குக் குறைச்சல் இல்லை. கடையைத் திறந்ததும் கட்டி ஏறி சரக்குகளை வாங்க குடிகாரர்கள் ஆர்வம் காட்டியதைப் பார்த்தபோது இந்த நேர மாற்றம் எந்த வகையான மாற்றத்தையும் தராது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்து போனது.