மந்திரியாரே! வெயில் அதிகரித்தும் பீர் விற்பனை உயரவில்லையே – என்ன காரணம்?
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இந்த வருடம் மார்ச் இறுதி வாரத்தில் இருந்தே கடும் வெயில் கொளுத்துகிறது. ஆனாலும், பீர் விற்பனை அதிகரிக்காமல் மந்தமாகவே உள்ளது.
இடையிடையே கோடை மழை பெய்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டி 102 டிகிரி வரை அடிக்கிறது.இதன் காரணமாக இம்மாவட்டத்திலுள்ள நீர்தேக்கங்கள் வறட்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மோர், இளநீர், நுங்கு மற்றும் குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். மதுபான பிரியர்களோ டாஸ்மாக் கடைகளுக்கு சென்று பீர் வகைகளை வாங்கி அருந்துகிறார்கள்.
இருப்பினும், கடும் வெயில் கொளுத்திய போதிலும் பீர் விற்பனை மந்தமாகவே உள்ளதாக டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் கூறுகிறார்கள்.
கடைக்கு வரும் குடிமகன்கள் தங்களுக்கு பிடித்த மது பானங்களையே அதாவது பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுபான வகைகளையே விரும்பி குடிக்கிறார்கள்.
இது பற்றி டாஸ்டாக் அதிகாரி கூறும் போது, ‘‘கடந்த ஆண்டு கோடை வெயில் தொடங்கிய உடனேயே பீர் விற்பனை நன்றாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பீர் விற்பனை குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 சதவீதம் பீர் விற்பனை குறைவாகவே உள்ளது.
இன்னும் ஓரிரு வாரங்களில் பீர் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம், பீர் விற்பனை அதிகரிக்கும் போது டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பீர் வகைகள் 1800 பெட்டிகள் வரை விற்பனை ஆகியுள்ளன.தேவைகளுக்கு ஏற்ப போதுமான அளவில் சப்ளை செய்யப்படும்'' என்று கூறினார்.