வாசல் பெருக்கிய பெண்ணுக்கு முத்தம் கொடுத்து கன்னத்தைக் கடித்த குடிகார டாஸ்மாக் ஊழியர்!
திருப்பூர்: திருப்பூரில் வாசல் பெருக்கிக் கொண்டிருந்த பெண்ணை குடிபோதையில் கட்டிப்பிடித்து கன்னத்தை கடித்த "டாஸ்மாக்" ஊழியரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள "டாஸ்மாக்" மதுபானக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருபவர் சின்ன மாசாணம். இவர் நேற்று பணி முடிந்து வீடு திரும்பும் போது மது அருந்தி விட்டுச் சென்றுள்ளார்.
வீட்டுக்கு போகும் வழியில், தாராபுரம் காமன் கோவில் வீதிக்கு சென்ற போது அங்கு வீட்டுக்கு முன்பு ஒரு பெண்மணி தன்னுடைய வீட்டின் வாசலை பெருக்கிக்கொண்டு இருந்துள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில், அந்த வழியாக சென்ற சின்ன மாசாணம் அப்பெண்ணைக் கண்டதும் அங்கேயே நின்று விட்டார். பிறகு, திடீரென்று அப்பெண்ணை பின்புறமாக சென்று கட்டிப்பிடித்த சின்னமாசாணம் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார்.
எதிர்பாராத இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் சின்ன மாசாணத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்ததுடன், சத்தம் போட்டு கத்தியுள்ளார். இதற்கிடையில் அப்பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சின்னமாசாணம் அப்பெண்ணின் இரண்டு கன்னங்களையும் கடித்து விட்டார்.
அப்பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் பெண்ணைக் கீழே தள்ளி விட்டு சின்ன மாசாணம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதில் காயமடைந்த அப்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அப்பெண் தாராபுரம் போலீசில் சின்னமாசாணம் மீது புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சின்னமாசாணம் அரசு ஊழியர் என்பதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.