தலைமையாசிரியரின் பாலியல் தொல்லை - மாணவி தீக்குளிப்பு - காயங்களுடன் உயிர் பிழைத்தார்
திருப்பூர்: திருப்பூரில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் தற்கொலைக்கு முயன்று தீக்காயங்களுடன் மாணவி ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், மணியகாரன் பேட்டையை சேர்ந்த மாணவி 15 வயதானவர். இவர் வெள்ளகோவில் துரை ராமசாமி நகரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய மாணவி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொள்ள முயன்றபோது இலேசான காயங்களுடன் காப்பாற்றப்பட்டார். இதுபற்றி பெற்றோர்கள் விசாரித்தபோது பள்ளி தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் கடந்த சில நாட்களாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் வெள்ளகோவில் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் நேற்று முன்தினம் இரவு மரியலூயிஸை கைது செய்தனர்.
இது பெண் குழந்தைகளின் பாலியல் வழக்கு என்பதாலும், தலைமை ஆசிரியரிடம் விசாரணை போன்றவற்றால் வெள்ளகோவில் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை தவிர்க்க இவ்வழக்கு காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
அங்கு தலைமை ஆசிரியர் மரியலூயிஸ் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தற்கொலை முயற்சிக்கு காரணமாவது, குழந்தைகளை பாலியல் குற்றத்தில் இருந்து பாதுகாத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். பின்னர் தலைமை ஆசிரியர் மரியலூயிசை காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் கோவை நடுவன் சிறையில் அடைத்தனர்.