கொல்லப்பட்ட தூத்துக்குடி ஆசிரியையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு!
தூத்துக்குடி: ஒருதலைக்காதல் விவகாரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை பிரான்சினா உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை உள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்த பிரான்சினாவிற்கு திருமணம் நிச்சயமாகி ஓராண்டு காலம் ஆகிறது. பிரான்சினா திருமணம் செய்து கொள்ளவிருந்த மாப்பிள்ளை கப்பலில் பணி புரிந்து வந்ததால் அவரும் அண்மையில்தான் விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்துள்ளார். அவர்கள் இருவருக்குமான திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல சர்ச்சுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் பிரான்சினா. கண் மூடி அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது, கீகன் என்பவர் சர்ச்சுக்குள் புகுந்து பிரான்சினாவை வெட்டி கொன்றுள்ளார். அங்கிருந்து தப்பியோடிய கீகனும் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து, வெட்டிக் கொல்லப்பட்ட பிரான்சினாவின் உடலும், தற்கொலை செய்து கொண்ட கீகனின் உடலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே இன்று பிரான்சினாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரான்சினாவின் சகோதரர் வெளிநாட்டில் இருந்து சனிக்கிழமை வருவதால் அன்று மாலையில் பிரான்சினாவின் உடலை அடக்கம் செய்யவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனை முன்னிட்டு, இரு வீட்டாருக்கும் இடையே மோதல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க மருத்துவமனை மற்றும் இருவீட்டாரின் வீடுகளைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.