”நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கடவுள்கள் இவர்கள்தான்”- ஹேப்பி டீச்சர்ஸ் டே!
சென்னை: இந்தியாவில் செப்டம்பர் 5 ஆன இன்று மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாட்டப்படுகின்றது. இதனை டூடுள் வரைந்து வழக்கம்போல கூகுளும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கவுரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால் ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்:
இந்தியாவில் செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
சிறந்த ஆசிரியர் அவர்:
அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பணியை மதித்த மனிதர்:
தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை சேர்த்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்களுக்கு முன்னுதாரணம்.
வாழ்வின் உந்துசக்தி:
ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கின்ற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியாக மாறுகின்றன.
ஆசிரியரே வாழ்வின் ஆதாரம்:
ஒரு சமூகம் அதி உன்னத நிலை அடைந்து இருந்தால் நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால் ஆசிரியர் சமூகம் தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம்.
ஊக்கமும், தன்னம்பிக்கையும்:
மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் ... இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை அடையும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியரின் பணியாக உள்ளது.
வார்த்தெடுக்கும் ஆசிரியர்கள்:
அப்படிப்பட்ட ஆசிரியர்களை கொண்டாடும் வகையில் கூகுளும் தன்னுடைய பங்கிற்கு எழுத்தாணி, சாக்பீஸ், கணித அளவீடுகள் நிறைந்த ஒரு டூடுளை தன்னுடைய முகப்புப் பக்கத்தில் இட்டுள்ளது. ஒவ்வொருவரையும் மனிதனாக வார்த்தெடுக்கின்ற கடினமான செயலைச் செய்யும் ஒவ்வொரு ஆசிரியப் பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நாள் நல்வாழ்த்துக்கள்!