ஆசிரியர்களின் ஒரு நாள் ஸ்டிரைக் வெற்றி... இது ஜாக்டோ: பாதிப்பில்லை என்கிறது அரசு
சென்னை: வேலை நிறுத்தப்போராட்டம் வெற்றி பெற்றதாக ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ அமைப்பு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தால் பாதிப்பில்லை, சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு தொடக்கப் பள்ளிகள் இயங்கியதாக கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 27ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பணிக்கு செல்லாமல் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம் முன்பும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3 லட்சம் ஆசியர்கள் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றனர்.
வேலைநிறுத்தம் அறிவிப்பு
ஜாக்டோ அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வேலை நிறுத்த போராட்டம் அறிவித்ததும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா அழைத்து பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் ஜாக்டோ உயர்நிலைக்குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவித்தனர்.
அதிரடி ஆலோசனை
போராட்டத்தை முறியடிக்க பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர்கள் போராட்டம் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, மாவட்ட அளவில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 21 இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் உத்தரவிடப்பட்டது.
ஆசிரியர்கள் போராட்டம்
காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சில ஆசிரியர்கள் வந்தனர். உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளை பொறுத்த வரை 80 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். ஆனால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.
புறக்கணித்த சபீதா
ஆசிரியர் சங்கங்களின் அமைப்பான ஜாக்டோ நிர்வாகிகளை அழைத்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாபேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. ஆனால் பள்ளிக்கல்வி செயலாளர் சபீதா தங்களை புறக்கணித்ததை தாங்கிக்கொள்ள ஜாக்டோ நிர்வாகிகள் வேறு வழியின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் வீடு திரும்பல்
தமிழகம் முழுவதும் 80 சதவிகித ஆசிரியர்கள் பணிக்கு செல்லவில்லை . அரசு தொடக்கப் பள்ளி கள், நடுநிலைப் பள்ளி கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்த நிலையிலும் 11 மணிக்கு மாணவர்கள் வீடு திருப்பினர். சில ஊர்களில் மதிய உணவிற்குப் பின்னர் மாணவர்கள் வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகின.
விளையாடிய மாணவர்கள்
நிலக்கோட்டை யூனியனில் மொத்தமுள்ள 130 பள்ளிகளில் 28 பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் வரவில்லை. யூனியனில் உள்ள அம்மையநாயக்கனூர், சேவுகம்பட்டி, மட்டப்பாறை, நிலக்கோட்டை உள்ளிட்ட 6 மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆசிரியர்கள் இன்று பணிக்கு வரவில்லை. இதனால் மாணவ- மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தினால் மாணவர்கள் வகுப்பறையை விட்டு மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அரசு ஆரம்ப பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் வகுப்பறையில் விளையாடினர்.
தேனியில் பாதிப்பில்லை
தேனி மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. மாவட்டத்தில் உள்ள 767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்பட்டது. பகுதி நேர ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பணிக்கு வந்திருந்தனர்.
மாணவர்களுக்கு ஜாலி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வந்ததால் பள்ளி வழக்கம் போல இயங்கியது. ஆனால் கீரமங்கலம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் திறக்கப்படவில்லை. அதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து திரும்பிச் சென்றனர்.
பள்ளிகள் மூடல்
செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே வந்திருந்தார். அதே போல நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் வராததால் பள்ளி திறக்கப்படவில்லை. அதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் பலர் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். பல மாணவர்கள் மதிய உணவு வரை இருந்து மதிண உணவு சாப்பிட்ட பிறகு வீட்டுக்குச் சென்றனர்.
நெல்லையில் போராட்டம்
நெல்லையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 2000 ஆசிரியர்களில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு வரவில்லை. இருப்பினும் பள்ளிகள் மூடப்படாமல், சத்துணவு ஆசிரியர், உடற்பயிற்சி ஆசிரியர் என போராட்டத்தில் பங்கேற்காத ஒன்றிரண்டு ஆசிரியர்களை கொண்டு இயக்கப்பட்டன.
கல்வித்துறை அறிவிப்பு
ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தால் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி செயல்பாட்டில் பாதிப்பில்லை, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் வரவில்லை, சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன, என கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.