ஆர்கே நகரில் ஒரே இரவில் ரூ128 கோடி இறக்கிய தினகரன்.. பகீர் கிளப்பும் பன்னீர் கோஷ்டி!
ஆர்கே நகர் தொகுதியில் ஒரே இரவில் ரூ128 கோடியை பட்டுவாடா செய்துள்ளதாம் தினகரன் கோஷ்டி. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது பன்னீர் கோஷ்டி.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரே இரவில் ரூ128 கோடி ரூபாயை தினகரன் கோஷ்டி பட்டுவாடா செய்துவிட்டதாக ஓபிஎஸ் கோஷ்டி பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் அமர்க்களமாக பணப்பட்டுவாடா நடந்து கொண்டிருக்கிறது என்பதை தேர்தல் ஆணையமே மறுக்காதுதான்.. அதுவும் டிடிவி தினகரன் கோஷ்டி பணத்தை தண்ணீராய் இறைத்துக் கொண்டிருக்கிறது.
நெருக்கடியில் தினகரன்
இப்படி தினகரன் கோஷ்டி கொடுத்திருக்கும் பணத்தில் பெரும்பாலும் கள்ளநோட்டுகள் என்பது புதிய பஞ்சாயத்து. இதனிடையே வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் அனைத்தும் தினகரன் கோஷ்டியை நெருக்கியும் வருகிறது.
ஒட்டுமொத்த பட்டுவாடா
இதனால் வேறுவழியில்லாமல் பணத்தை ஒட்டுமொத்தமாக பட்டுவாடா செய்துவிடுவது என்பதில் மும்முரமானது தினகரன் கோஷ்டி. நேற்று ஒரே இரவில் ரூ128 கோடியை முழுவீச்சில் பட்டுவாடா செய்ததாம் தினகரன் கோஷ்டி.
ரகசிய வீடியோக்கள்
இப்படி பட்டுவாடா செய்யப்பட்ட இடங்களில் வீடியோக்களை ரகசியமாக எடுத்து உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தும் புகாராக அனுப்பி வருகிறதாம் பன்னீர் கோஷ்டி. தினகரனைப் பொறுத்தவரை தேர்தல் ரத்தானாலும் பரவாயில்லை...பணத்தை காட்டி மக்களை மயக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்கிற வெறித்தனம்தான் இருக்கிறதாம்.
கதிகலங்கும் கட்சிகள்
ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து நசுக்கியேனும் அதிகார நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில்தான் அவ்வளவு குறியாக இருக்கிறாராம் தினகரன். இதனால் ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடக்குமா? நடக்காதா? போட்ட காசு கிடைக்குமா? கிடைக்காதா? என பீதியில் இருக்கின்றனராம் இதரகட்சி நிர்வாகிகள்.