இனி நான் பினாமி முதல்வர் அல்ல -முடிவுக்கு வந்த 'கம்பெனி ஆட்சி'- உற்சாகத்தில் எடப்பாடி!
சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் ஒழிந்ததால் இனி தாம் பினாமி முதல்வர் அல்ல என்ற மகிழ்ச்சியில் இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: இனி தாம் பினாமி முதல்வர் அல்ல எனவும் சசிகலா கோஷ்டிக்கு கப்பம் கட்டும் வேலையும் இல்லை எனவும் உற்சாகத்தில் இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அ.தி.மு.க கோஷ்டிகள் இணைப்பு குறித்த வேலைகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக உறக்கம் இல்லாமல் விவாதித்து வருகின்றனர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர்.
இதுநாள் வரையில் போயஸ் கார்டன் உத்தரவை ஏற்றுச் செயல்படுத்தி வந்த அமைச்சர்கள் சுயமாக முடிவு எடுத்ததை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். எம்.ஜி.ஆர் இறந்த நேரத்தில் முப்பது லட்சமாக இருந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஒன்றரை கோடியாக உயர்த்தி பெருமை ஜெயலலிதாவையே சாரும். கட்சி நிர்வாகம் கட்டுக்கோப்புடன் செல்வதற்கு அவர் வகுத்துக் கொடுத்த பாதைகளே காரணம். அவர் இருந்தவரையில் சசிகலாவின் ஆட்டம் குறித்துப் பேசுவதற்கே அமைச்சர்கள் அஞ்சினர்.
ஆட்டம் போட்ட சசிகலா
இதையும் மீறிப் பேசியவர்கள் எல்லாம், அரசியலில் இருந்தே காணாமல் போனார்கள். ஜெயலலிதாவை சாட்சியாக வைத்துக் கொண்டு சசிகலாவும் அவருடைய குடும்பத்தினரும் அமைச்சர்களை ஆட்டிப் படைத்தனர். 1991-ம் ஆண்டில் இருந்து கார்டனின் அன்-அக்கவுண்டுகளை சசிகலாதான் பராமரித்து வந்தார்.
கப்பம் கட்டிய அமைச்சர்கள்
அமைச்சர்கள் அனைவரும் தங்கள் துறையின் செல்வாக்குக்கு ஏற்ப, மாதம்தோறும் சில கோடிகளைக் கப்பமாக கட்ட வேண்டும். இந்தப் பணத்தைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு, அமைச்சரவையின் மூத்தவருக்கு வழங்கப்பட்டது.
சொந்தப் பணம் கட்டியவர்கள்
இந்தப் பணத்தில் சிறிதளவு குறைந்தாலும், அந்த அமைச்சரின் பதவி பறிக்கப்படும். கூடவே கார்டனின் கடும் நடவடிக்கைளையும் எதிர்கொண்டு வந்தார்கள். மாதம்தோறும் கப்பம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டால், சொந்தப் பணத்தையே கப்பம் கட்டிய அமைச்சர்களும் உண்டு.
இனி கப்பம் இல்லை
ஒரு குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என அமைச்சர்கள் இப்போது தைரியமாகப் பேசுவதற்கு இதுவும் ஒரு காரணம். இனி பெரும்பகுதியை சசிகலா தரப்புக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
தப்பி ஓடிய ஒப்பந்ததாரர்கள்
ஒவ்வொரு முறை அரசு தொடர்பான ஒப்பந்தம் நடக்கும் போதும், கட்சி நிதி, கார்டன் நிதி, அமைச்சர் நிதி எனப் பலவகைகளில் காண்ட்ராக்டர்களை அமைச்சர்கள் நெருக்கி வந்தனர். இதனால், பல ஒப்பந்ததாரர்கள் வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்தனர்.
சசி சொந்தங்களின் அலுவலங்கள்
அத்துடன் சசிகலாவுக்கு வேண்டிய உறவுகளும் சென்னையில் பல அலுவலங்களைத் திறந்து வைத்திருந்தனர். இவர்களிடம் பதவி உயர்வுக்காக பல கோடிகளைக் கொடுத்து ஏமாந்தவர்களும் அதிகம். இந்தப் பணத்தைக் கேட்கப் போய், காவல்துறையால் 'கவனிக்கப்பட்ட'வர்களும் உண்டு.
ஏமாந்தவர்கள் படையெடுப்பு
தற்போது கோஷ்டிகள் இணைப்பால் சசிகலா உறவுகளின் இந்த அலுவலகங்கள் காணாமல் போய்விட்டன. சட்டசபை தேர்தல் நேரத்தில் சீட் வாங்கித் தருவதாக 100 கோடி ரூபாய்கும் மேல் சுருட்டினார் மருத்துவர் ஒருவர். பணம் பெற முடியாமல் தவித்தவர்கள் எல்லாம் தற்போது படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
எம்.எல்.ஏக்கள் பல்டி
சசிகலா குடும்பத்தைப் புறக்கணித்துவிட்டு அதிமுக கோஷ்டிகள் இணைவதால் அமைச்சர்களுக்கும் நல்ல லாபம் வந்து சேரப் போகிறது. இனி யாரிடம் கைகட்டி நிற்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்துதான், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பக்கம் சாய்ந்தனர்.
இனி பினாமி அல்ல
மேலும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் எடப்பாடியை பினாமி அரசு என்றே வெளியில் உள்ளவர்கள் விமர்சித்தனர். 'இனி யாரும் அப்படி அழைக்க மாட்டார்கள்' என்ற உற்சாகத்தில் இருக்கிறார் அவர்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.