குளிரும் மார்கழியில் சித்திரை போல கொதிக்கும் வெப்பம்- காரணம் என்ன?
தமிழகத்தில் வானம் மேகமூட்ட மின்றி தெளிவாக காணப்படுவதால் பல்வேறு நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை: பங்குனி, சித்திரை போல மார்கழியிலேயே வெப்பம் தகிக்கிறது. கோடை தொடங்குவதற்கு முன்பே இந்த அளவுக்கு வெப்பம் அதிகரிப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக் காலம் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், வானம் தெளிவாக மேகமூட்டமின்றி காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
வெப்பநிலை
கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி யுள்ளது. கன்னியாகுமரியில் 33 டிகிரி, மதுரையில் 32 டிகிரி, கோவை, பாளையங்கோட்டை, பரங்கிப் பேட்டை, திருச்சியில் 31 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.
குளிரும் வெப்பமும்
சென்னை, தஞ்சாவூர், பாம்பன், புதுச்சேரி ஆகிய நகரங்களில் தலா 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் பகலில் வெப்பம் இரவில் கடுங்குளிர் என வாட்டி வதைப்பதால் பலருக்கும் காய்ச்சல், உடல்வலிகள் ஏற்படுவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தெளிவான வானம்
மார்கழியில் ஏன் இப்படி வெப்பம் என்று கேட்டதற்கு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தற்போது வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதிக்கு அருகே எந்த காற்றழுத்தமோ, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ இல்லை. அதனால் தமிழக வான் பகுதியில் மேகக் கூட்டங்கள் உருவாகாமல் தெளிவாக காட்சியளிக்கிறது என்று கூறியுள்ளனர். இதனால் சூரியனிடமிருந்து வரும் வெப்பக் கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்குகிறது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம்
குளிரும் மார்கழியில் கோடை போல வெப்பம் சுட்டெரிப்பதால் நோய் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. ஒருபக்கம் வறட்சி வாட்டி வதைக்க, சென்னை சுற்றுவட்டார நகரங்களில் வர்தா புயலின் பாதிப்பு இன்னமும் நீடிக்கிறது. வறண்ட வானிலையால் பொங்கல் பண்டிகை நாட்களில் வெயில் வெளுத்து வாங்கும் என்பது மட்டும் உண்மை.