திருவள்ளூரில் கோயில் கோபுர சுவர் இடிந்து விழுந்து சிறுமி பரிதாப சாவு
திருவள்ளூர் : திருவள்ளூரில் கோயில் கோபுர சுவர் சரிந்து விழுந்ததில், சாமி தரிசனம் செய்ய சென்ற சிறுமி, தாய் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர் மப்பேடு தபால் நிலையத்தில் போஸ்ட் மேனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் யமுனா அங்குள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று தனது தாயுடன், அருகிலுள்ள சோளீஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, கோயிலில் தனது தாயுடன் சேர்ந்து சுற்றி வந்தார். அப்போது, கனமழை காரணமாக அப்போது, கோபுரத்தின் மீதிருந்து சுற்றுச்சுவர் எதிர்பாராதவிதமாக சரிந்து யமுனா மீது விழுந்தது.
இடிபாடுகளுக்குள் சிக்கி யமுனாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக தண்டலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி யமுனா உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.