மிரட்டிட்டு இருந்துர முடியுமா ராஜா...? கேட்கிறார் தா.பா!
மணப்பாறை: வைகோ உள்ளிட்டோரைத் தாக்குவோம் என்று பேசி வரும் ராஜா போன்றவர்கள், தாங்களும் அதே தமிழ்நாட்டில்தான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப் பேசி விட்டு பாதுகாப்பாக இருந்து விட முடியுமா என்பதையும் ராஜா யோசித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
மணப்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசிய தா.பாண்டியன், ராஜா பேசுகிற போது பிரதமர் நரேந்திர மோடியையோ, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையோ வைகோ போன்றவர்கள் விமர்சனம் செய்து விட்டு ஊர் திரும்பி பத்திரமாய் போய் சேர முடியாது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒவ்வொரு தொண்டரும் அவரை கவனித்துக் கொள்வார்கள் என்று அவர் பேசியதாக கேள்விப்பட்டேன்.
அவர் அவ்வாறு பேசியிருப்பாரேயானால் ஆர்.எஸ்.எஸ் என்ன பாணியிலே பேசும், அவருடைய தாய் மொழி எது என்பதை தெளிவாக காட்டி விட்டது. ஆனால் அவர் கொஞ்சம் நாவடக்கத்தோடு பேச வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள என் அருமை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக நிறுவனத் தலைவர் வைகோ அவர்கள் மட்டுமல்ல. ஜனநாயக நாட்டில் பிரதமரையும் யாராக இருந்தாலும் அரசியல் ரீதியாக விமர்சனம் செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.
மாறாக, அவர் அவ்வாறு பேசினால் வீட்டுக்கு திரும்ப முடியாது என்று பேசுகிறவர்கள் தமிழ்நாட்டு மண்ணில் இருந்து தான் பேசுகின்றோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் இந்த தமிழகத்திலே அரசியல் தலைவர்களை இவ்வாறு தாக்குவோம் என்று மிரட்டினால் அவர்கள் தமிழகத்தில் தங்கி பாதுகாப்புடன் இருக்க முடியுமா என்பதை கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.
நல்லகண்ணு கண்டனம்
அதே செய்தியாளர்கள் சந்திப்பின்போது உடன் இருந்த மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகையில், பா.ஜ.க. தேசிய செயலாளர்களில் ஒருவரான எச்.ராஜா ம.தி.மு.க. நிறுவனத்தலைவரும் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவருமான வைகோ மோடியை பற்றி அதிகமாக பேசினால் ஊர் திரும்பமுடியாது என்று பேசிய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரு ஆளும் கட்சியின் தேசியச் செயலாளர், அவர் கட்சிக்காக தோள் கொடுத்தவர் வைகோ. அப்படி இருந்தும் கூட மாற்றுக்கருத்து வந்தால் மாற்றுக்கருத்து சொல்வதற்கு உரிமை உள்ளது.
மாற்றுக் கருத்தும் இருக்கலாம் கருத்து மோதல்களும் இருக்கலாம். கருத்து மோதல்களாக இருந்தால் அது சரியாக இருக்குமே தவிர இப்படி ஊர் திரும்ப முடியாது என்ற வார்த்தை உண்மையாக இருக்குமேயானால் அது வருத்தப்படக்கூடியது, அநாகரிகமானாது. அப்படி பேசி இருக்க கூடாது என்பதை அரசியல் நாகரீகம் கருதி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் நல்லகண்ணு