தைப்பூசம் : வடலூர் வள்ளலார் கோவிலில் ஜோதி தரிசன விழா கோலாகலம் - பக்தர்கள் குவிந்தனர்
வடலூர் சத்திய ஞான சபையில் 146-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
கடலூர்: வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகளால் வடலூரில் சத்திய ஞான சபை அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச நாளன்று ஜோதி தரிசனப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடி நின்றேன் என்று பாடி ஜீவ காருண்யத்தை அன்றே உலகுக்கு எடுத்துரைத்தவர் வள்ளலார். சத்தியஞான சபையை இவர் வடலூரில் நிறுவினார்.
இந்த ஆண்டுக்கான 146ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை காலை 5 மணியளவில் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் தர்மசாலை, மருதூர் மற்றும் கருங்குழியில் உள்ள வள்ளலார் சந்நிதியில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் 'அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை' என்று முழக்கமிட்டனர். காலை 10 மணியளவில் ஞானசபையில் சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு தருமசாலை பரசங்க மேடையில் திருஅருள்பா கருத்தரங்கம் நடைபெற்றது.
ஜோதி தரிசனம்
விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா, இன்று தொடங்கியது. காலை 6 மணிக்கு 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அப்போது அதிகாலையிலேயே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' என்ற மகா மந்திரததை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் குவிந்தனர்
காலை 10, பிற்பகல் ஒரு மணி, இரவு 7, 10 மணி மற்றும் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி என 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். ஜோதி தரிசனத்தைக் காண வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
ஒளிவடிவான இறைவன்
தைப்பூச நாளில் வள்ளலார் முக்கியடைந்தார். இறைவன் ஒளிமயமானவன் என்பதை உணர்த்தும் வகையிலேயே தைப்பூச நாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. சென்னை, புதுச்சேரி, கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், வேலூர் ஆகிய பகுதிகளிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அன்னதானம்
தைப்பூச ஜோதி தரிசன விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக எல்சிடி திரை அமைக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தைக் காண வந்துள்ள பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாவில் அன்னதானம் வழங்குவோர் இலை அல்லது பாக்கு மட்டை தட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.