அடக்கி வாசிங்க...'மணியான' அமைச்சர்களுக்கு தம்பிதுரை அட்வைஸ்!
தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களை அழைத்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை : சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியை அழைத்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை செவ்வாய்கிழமையன்று சந்தித்து பேசினார். அப்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து கட்சியினர் மத்தியில் தகவல்கள் கசிந்துள்ளன.
சசியை பார்த்த தம்பிதுரை மிகவும் பம்மி கட்சி நீங்க சொன்னபடி நல்லபடியா போய்க்கொண்டிருக்கிறது என்று அந்தர் பல்ட்டி அடித்தாராம். அதோடு நின்றுவிடாமல் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்கலாம் என்றும் கிசுகிசுத்தாராம். இதனையடுத்து என்ட்ரி கொடுத்த தினகரன் சரவணன் வீடியோ விவகாரம் முதல் கட்சியினர் நடவடிக்கை வரை அனைத்தையும் புட்டு புட்டு வைத்தாராம்.
புகார் வாசித்த தினகரன்
கட்சியில் என்னை யாரும் மதிக்க மாட்டேன் என்கிறார்கள் ஆளாளுக்கு மீடியாக்களிடம் போய் கருத்து தெரிவிக்கின்றனர். கட்சி மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சி என்று எதுவாக இருந்தாலும் முதல்வர் பழனிசாமி படம் மட்டுமே இடம்பெறுகிறது என்று தனது வேதனையை கொட்டினாராம் தினகரன்.
விலாசிய சசி
தினகரன் கொடுத்த ரிப்போர்ட்டையடுத்து கடுப்பான சசிகலா என்ன தம்பிதுரை பழசெல்லாம் நினைப்பிருக்கிறதா என்று கேட்டு முறைத்தாராம். என்ன தம்பிதுரை நீங்க வேற என்னவோ சொன்னீங்க என்று கேட்ட சசி, உங்களுக்கு குடைச்சல் கொடுத்த செந்தில்பாலாஜிய தட்டி வைக்க சொன்னீங்க அதை உங்களுக்காக செஞ்சேன்ல என்று கேட்டாராம்.
எங்க குடும்பத்துக்கே தடையா
அதோடு நின்றுவிடாமல் நான் ஸ்திரப்படுத்தின கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள்ளேயே எங்க வீட்டுப் பையன் கால் வைக்கக் கூடாது என்று எப்படி சொல்வீங்க, அவர் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்று பொங்கி விட்டாராம். இந்த கட்சியை எப்படி நடத்தணும்னு எனக்கு தெரியும் அது என்னால் மட்டுமே முடியும் என்றாராம் சசி.
ஜாக்கிரதை
நீங்க எல்லாம் நினைக்குற மாதிரி கட்சி உங்களை நம்பி இல்லை, எப்ப வேணாலும் ஆட்சியை கலைச்சு உண்மை விசுவாசிகளை வெச்சு எப்படி கட்சியை மேலே கொண்டு வரனும்ணு எனக்கு தெரியும் என்று மிரட்டலும் விடுத்தாராம் சசிகலா. மேலும் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள அனைவரின் பீஸையும் பிடுங்கி அடிப்படை உறுப்பினராக்கிடுவேன் ஜாக்கிரதை என்றும் எச்சரித்தாராம்.
ரகசிய அட்வைஸ்
சசிகலா கொடுத்த ஹெவி டோஸால் மண்டை கிறுகிறுத்துப் போன தம்பிதுரை விஷயங்களை முதல்வர் எடப்பாடி காதுக்கு சொல்லியிருக்கிறாராம்.
மேலும் சசிகலா, தினகரன் இல்லாத காலகட்டத்தில் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்த தங்கமணி, வேலுமணிக்கு குறி பாய்வதால் அவர்களை அடக்கி வாசிக்கவும் தம்பிதுரை அட்வைஸ் செய்தாராம்.
தம்பித்துரை வீட்டில் ஆலோசனை
இதற்காகத் தான் நேற்று பட்டினப்பாக்கத்தில் உள்ள லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை வீட்டில் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட தமிழக அமைச்சர்களுடன் ரகசிய ஆலோசனை நடந்தது என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அடுத்தடுத்து அரங்கேறும் அரசியல் மாற்றங்களால் தமிழக அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.