"நண்பர்" ஆளுநரைப் பார்த்த கையோடு.. முதல்வரையும் சந்தித்துப் பேசிய தம்பிதுரை!
ஆளுநரை சந்தித்த அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் தம்பிதுரை சந்தித்து பேசினார்.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று காலை சந்தித்த லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
தமிழக அரசியலில் கடந்த சில நாள்களாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் வழங்கியதாக தினகரனுக்கு சம்மன், அதிமுக இணைவு, எம்ஜிஆர் பல்கலை துணை வேந்தர் கீதா லட்சுமி வீட்டில் ரெய்டு உள்ளிட்டவை நடந்தன.
இந்நிலையில் ஏற்கெனவே கடந்த ஓராண்டில் 3 முதல்வர்களைப் பார்த்த தமிழகம் 4-ஆவது முதல்வரையும் பார்க்க வேண்டிய சூழல் வருமோ என்ற அபாயத்தில் உள்ளது. காரணம், அதிமுக இணைய வேண்டுமானால் முதல்வர் பதவியையும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியையும், 6 அமைச்சர்கள் பதவியையும் தங்களுக்கு விட்டுதர வேண்டும் என்று ஓபிஎஸ் டிமான்ட் வைக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகைக்கு வந்த தம்பிதுரையும், ஜெயகுமாரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை தனித் தனியாக சந்தித்தனர். அப்போது தமிழக சூழல் குறித்தும் அமைச்சரவையில் மாற்றம் குறித்தும், முதல்வர் மாற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்பட்டது.
ஆனால் ஆளுநரை சந்தித்துவிட்டு வெளியே வந்த தம்பிதுரை செய்தியாளர்களிட்ம தெரிவிக்கையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. இதை அரசியலாக்க வேண்டாம். நானும் ஆளுநரும் கடந்த 90-களில் இருந்து நண்பர்கள். எனவே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.
ஆனால், ஆளுநரை சந்தித்த அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளார். நெருப்பின்றி புகையாது என்பது போல் விஷயமின்றி ஏன் இத்தனை சந்திப்புகள்? முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாகலாம் என்று தெரிகிறது.