சசிகலாவை தனிப்பட்ட முறையில் யாராலும் நீக்க முடியாது - தம்பிதுரை திட்டவட்டம்
சசிகலா முறைப்படி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர். நானோ, மற்றவர்களோ அவரை தனிப்பட்ட முறையில் நீக்கிவிட முடியாது என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: அதிமுக பொதுச் செயலாளராக உள்ள சசிகலாவை தனிப்பட்ட முறையில் யாராலும் நீக்கிவிட முடியாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இரு அணிகளாக பிரிவு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள இரு அணிகளும் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இரு அணியை சேர்ந்தவர்களும் மாறி மாறி பேசி வருவதால் அதற்கான சூழல் ஏற்படவில்லை. அ.தி.மு.க இரு அணிகளும் ஒன்றிணைய சசிகலா, டிடிவி.தினகரன் குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பு திட்டவட்டமாக கூறிவிட்டது.
இந்நிலையில் மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரை கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுகவில் எங்களுக்குள் பிளவு என்பது இல்லை. நாங்கள் அனைவரும் விரைவில் ஒன்றுபடுவோம். கட்சி நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த நேரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி சிறக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
அதிமுகவில் நாங்கள் அனைவரும் நண்பர்கள்தான். மைத்ரேயன் எம்.பி.யும் நண்பர், கழகத்தின் உறுப்பினரான அவர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்தான். பிரச்சனைகளை எங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்வோம். சசிகலா முறைப்படி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர். நானோ, மற்றவர்களோ அவரை தனிப்பட்ட முறையில் நீக்கிவிட முடியாது.
அனைவரும் ஒன்று சேர்ந்து, பொதுக்குழு எப்படி செயல்பட்டதோ அவ்வாறே மீண்டும் செயல்படுத்த வழி காண வேண்டுமே தவிர, மற்றபடி தனிப்பட்ட முறையில் யாரையும் குறை கூறுவதை ஏற்க முடியாது. டி.டி.வி.தினகரன் அவராகவே முன்வந்து, ஒதுங்கிவிடுவதாக சொல்லி விட்டார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி எல்லோரும் அ.தி.மு.க.தான் என்றார்.