தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியே தொடருவார்: தம்பிதுரை பேட்டி
எடப்பாடி பழனிச்சாமியே தமிழக முதல்வராக தொடருவார் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை எனவே அவரே முதல்வராக தொடருவார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை கூறுகையில், எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை. கருத்து வேறுபாடு மட்டுமே உள்ளது. கருத்து வேறுபாடுகளை களையவே இரு அணிகள் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்சியும், கட்சித் தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்று கூறியது உண்மைதான். அனைவரும் ஒருமித்த கருத்தோடு சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது உண்மை தான். அதிமுகவில் பல சூழ்நிலைகளில் அவர்கள் உதவி செய்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது. சசிகலா சிறையில் இருப்பதால் கட்சிப் பணிகளை மேற்கொள்ள சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. பொது வாழ்வில் யாரும் மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டார்கள் என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற எந்த முகாந்திரமும் இல்லை எனவே அவரே முதல்வராக தொடருவார் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றார் .