இந்துக்கள் அதிகமாக கொலை செய்யப்படுவதாக கூறுவதா? ஸ்டாலினுக்கு தமீம்முன் அன்சாரி கண்டனம்
மயிலாடுதுறை: அதிமுக ஆட்சியில் இந்துக்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலர் தமீம்முன் அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை அருகே நீடூர்-நெய்வாசலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமீம்முன் அன்சாரி பேசியதாவது:
கோவையில் இந்து முன்னணி செய்திதொடர்பாளர் படுகொலை சம்பவத்தை மனிதநேய ஜனநாயகட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து பாட்டாளிமக்கள் கட்சிதலைவர் ராமதாஸ், விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆனால் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடையை சூறையாடியதையும், பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டதை கூறி உள்ளார். பள்ளிவாசல்மீது கல்வீசியதை கூறவில்லை.
அதேபோல் அ.தி.மு.க. ஆட்சியில் இந்துக்கள் அதிகமாக படுகொலை செய்யப்படுகிறார்கள் என்று ஸ்டாலின் கூறியது ஏற்புடையதல்ல.
இவ்வாறு தமீம்முன் அன்சாரி கூறினார்.