சட்டுபுட்டுன்னு பிரச்சனைய முடிச்சிட்டு மக்கள் வேலைய பாருங்கள்.. அதிமுகவிற்கு தமிழிசை அட்வைஸ்
அதிமுகவில் நடந்து வரும் பிரச்சனைகளை சட்டுபுட்டுன்னு முடித்துவிட்டு மக்கள் வேலையை பாருங்கள் என்று பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அதிமுகவை முடக்கி பாஜக வர வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவிற்குள் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் தனி அணியாக உருவாகி தினகரனுக்கு எதிராக போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், இது தினகரனை தலைமையை சீர்குலைக்க வேண்டும் என்றும் அதிமுகவை சின்னாபின்னப்படுத்த வேண்டும் என்றும் பாஜக திட்டம் தீட்டி வருவதாக அதிமுக அம்மா கட்சி செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் குற்றம்சாட்டியிருந்தார்.
அதிமுக முடக்கம்
இதற்கு பதில் அளித்துள்ள தமிழிசை, அதிமுகவை முடக்கி எங்களது கட்சியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் நினைத்ததில்லை. நாங்கள் தனியாகவே தமிழகத்தில் வளர்வோம் என்று கூறினார்.
சட்டுபுட்டுன்னு..
மேலும், அதிமுகவில் உள்ளவவர்கள் அவர்களாகவே இணைகிறார்கள். அவர்களாகவே பிரிகிறார்கள். என்னப் பிரச்சனையாக இருந்தாலும் சட்டுபுட்டுன்னு முடிச்சிட்டு மக்கள் வேலையை பாருங்கள் என்று அதிமுகவினருக்கு அட்வைஸ் செய்தார் தமிழிசை.
நாடகம்
இந்த நாடகமே தொடர்ந்து தமிழ் நாட்டில் இருக்க வேண்டாம். எவ்வளவு நாட்கள் இதனை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. விரைவில் பிரச்சனையை முடித்துக் கொண்டால் நல்லது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
பின்வாசல்
பாஜகவிற்கும் இந்தப் பிரச்சனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்றும் பின்வாசல், பின்புலம், ரகசிய பரிமாற்றம் எதுவும் எங்களுக்குள் கிடையாது என்றும் கூறிய தமிழிசை தமிழகத்தில் நேரடியாக அரசியல் செய்யவே நாங்கள் நினைக்கிறோம் என்று கூறியுள்ளார்.