திராவிட நாடு.. தீவிரவாத சக்திக்கு இளைஞர்கள் பலியாகக் கூடாதாம்.. தமிழிசை ‘வார்னிங்’
மாட்டிறைச்சி தடையால் திராவிடநாடு என்ற கோஷம் மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த பிரிவினைவாத சக்திக்கு இளைஞர்கள் பலியாகிவிடக் கூடாது என்று தமிழிசை கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: மாட்டிறைச்சிக்கு தடை என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் கடும் எதிர்ப்பு பாஜவிற்கு எழுந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திராவிடம் குறித்த கருத்தாக்கங்கள் மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பேசும் பொருளாக மாறியிருப்பதோடு, முக்கிய சமூக இயக்கங்களைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு கடுமையான எதிர்ப்பை தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை திராவிட நாடு சிந்தனை என்பது ஒரு பிரிவினைவாத சிந்தனை என்று குறிப்பிட்டார்.
மேலும், பிரிவினைவாதிகள் திராவிட நாடு கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இதற்கு முன்னர் எழுப்பட்டும் அது நிறைவேறாமல் போய்விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை மத்திய அரசு நன்றாக கவனித்து வருகிறது. எனவே, தமிழக இளைஞர்கள் திராவிட சிந்தனைக்கு பலியாகிவிடக்கூடாது தமிழசை கூறியுள்ளார்.