தங்கம் தென்னரசு காரிலிருந்து 6 செல்போன்கள், ரூ. 60,000 பணம் அபேஸ்
வேலூர்: முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் காரில் வைக்கப்பட்டிருந்த 6 செல்போன்கள் மற்றும் ரூ. 60,000 பணம் ஆகியவை திருடு போயுள்ளது. இதை எடுத்த மர்ம நபர்களைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவி நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கலந்துரையாடல் கூட்டத்திற்காக போயிருந்தது. இதில் தங்கம் தென்னரசுவும் இடம் பெற்றுள்ளார். இந்தக் குழுவினர் நேற்று மாலை வேலூர் சென்றனர். தென்னரசு தனது காரிலிருந்து இறங்கி ஆலோசனைக் கூட்டம் நடந்த ஹாலுக்குள் போய் விட்டார்.
போய் விட்டுத் திரும்பி தனது காரில் ஏற வந்தவர் காரில் வைத்து விட்டுப் போயிருந்த சூட்கேஸ், ஒரு பை ஆகியவற்றைக் காணாமல் திடுக்கிட்டார். அந்த சூட்கேஸில் ரூ. 60,000 பணமும், பையில் செல்போன்கள் 6, ஏடிஎம் கார்டு, எம்.எல்.ஏ. அடையாள அட்டை ஆகியவை இருந்ததாம்.
இதுகுறித்து தங்கம் தென்னரசுவின் கார் டிரைவர் சேகர், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் புகாரைப் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.