ப.பாண்டி- ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்... தங்கர்பச்சான் பாராட்டு
நடிகர் ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி படத்தை ஒவ்வொரு வரும் பார்க்க வேண்டும் என்று தங்கர்பச்சான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர்ராஜ்கிரண் நடித்த ப.பாண்டி படத்தை ஒவ்வொரு வரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்று தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
ராஜ்கிரண் நடிப்பில் தனுஷ் இயக்கி, தயாரித்த படம் ப.பாண்டி. சமீபத்தில் வெளியான இந்த படம் குறித்து தங்கர்பச்சான் தனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவிக்கையில், ராஜ்கிரண் முதன்மை பாத்திரத்தில் நடித்து, நடிகர் தனுஷ் இயக்கியிருக்கும் ப.பாண்டி திரைப்படத்தை பார்த்தேன்.
நெடுநாளைக்குப்பின் ஒரு பொழுது போக்கு திரைப்படம் படம் பார்ப்பவர்கள் அனைவரின் உணர்வையும் தொட்டுப்பார்த்து விட்டு சென்றிருக்கிறது. ஒரு தகப்பனின் உணர்வையும்,அவர் மூலம் படம் பார்ப்பவர்களின் குற்றவுணர்வையும் வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்தப் படம் தமிழ் சினிமா இதுவரைப் பேசாத சில பகுதிகளை பேசியிருக்கிறது.
அறிவியல் தொழில்நுட்பம் மனித உறவுகளிடம் நேர்முக உரையாடலையும், சந்திப்பையும் முறித்துக்கொண்டு வரும் காலத்தில் தகப்பனின் மனதை ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் கடத்தி உறவை பலப்படுத்தியிருக்கிறது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் ப.பாண்டி. படம் பார்த்த ஒவ்வொருவரும் அதன்பின் தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்வார்கள்.
ஒவ்வொருவரும் தவறாமல் அவரவர் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் படத்தை காண்பியுங்கள். எப்பொழுதுமே உணர்வுகளுக்குப்பின்தான் தொழில்நுட்பம் என்பதை இந்தப்படம் உணர்த்துகிறது. தனுஷின் இந்த முயற்சியை படம் பார்த்த அனைவரையும்போல் நானும் பாராட்டி மகிழ்கிறேன் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.