பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்திக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்.. முக்கிய முடிவு வெளியாகிறதா?
குடகு விடுதியில் தங்கியுள்ள 20 எம்எல்ஏக்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க உள்ளதாக தங்கதமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: குடகு விடுதியில் தங்கியுள்ள 20 எம்எல்ஏக்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்திக்க உள்ளதாக தங்கதமிழ்ச்செல்வன் எம்எல்ஏ கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்று புதுச்சேரி விடுதியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த 8ம் தேதி முதல் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள பேடிங்டன் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். தமிழக போலீசார் ரிசார்ட்டுக்கே வந்து மிரட்டுவதாக கர்நாடக போலீசாரிடம் புகார் அளித்துவிட்டு பாதுகாப்பு கேட்டு காத்திருக்கின்றனர் எம்எல்ஏக்கள்.
இந்நிலையில் தினகரன், சசிகலாவிற்கு ஆதரவாக குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ள 20 எம்எல்ஏக்களும் செப்டம்பர் 20ம் தேதி பெங்களூரு செல்ல உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனுடன் எம்எல்ஏக்கள் 20 பேரும் சிறை வளாகத்தில் சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட நிலையில் முதன்முதலாக தனது குடும்பத்தினர் அல்லாமல் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளார் சசிகலா. தமிழக அரசியல் சூழலில் இது மிகவும் பரபரப்பு வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது.