கூலிப்படை மூலம் மனைவியைக் கொன்ற துணை தாசில்தார் - கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கூலிப்படை மூலம் மனைவியை கொலை செய்த வழக்கில் துணை தாசில்தார் கைது செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்கடி கோக்கூரை சேர்நதவர் ராமசந்திரன். கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக வேலை பார்த்த இவர் தற்போது ஒட்டபிடாரம் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி விஜயலட்சுமி. இவரது மகன் மற்றும் மகள் முறையை தூத்துக்குடி, கோவையில் உள்ள எஞ்சினியரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு 7 மணி அளவில் வீ்ட்டின் முன்புற அறையில் விஜயலட்சுமி குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். 5 மாதமாகியும் இது துப்பு துலக்கவில்லை.
இதையடுத்து தூத்துக்குடி டிஎஸ்பி அருண் சக்திகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் இந்த வழக்கை மீண்டும் புதிய கோணத்தில் விசாரித்தனர்.
இந்த நிலையில் சிப்காட் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்ற புகழ் ராஜ் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தாளமுத்து நகரில் வசித்து வந்த மதுரை நடுக்கன் குளத்தை சேர்ந்த கனகபாண்டியன் என்பவர் பணத்திற்காக துணை தாசில்தார் ராமசந்திரன் மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மதுரையில் பதுங்கியிருந்த கனகபாண்டியனையும், அவரது உறவினரான முருகேசன் என்பவரையும் மடக்கிப் பிடித்தனர்.
இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். இதில் துணை தாசில்தார் ராமசந்திரனிடம் பணத்தை பெறறு கொண்டு அவரது மனைவி விஜயலட்சுமியை குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கலெக்டர் ரவிக்குமாரிடம் அனுமதி பெற்று அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த துணை தாசில்தார் ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
அவர் என்ன காரணத்திற்காக கூலி படையை ஏவி கொலை செய்தார் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.