துன்னு.. குந்து.. இஸ்துகினு.. சென்னை செந்தமிழ்... அழகு தமிழ்
தாய்மொழி தினமான இன்று சென்னை செந்தமிழ் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். அதில் எவ்வளவு அழகிய இலக்கிய தமிழ் இருக்கிறது என்று பார்ப்போம்.
சென்னை: சென்னை மொழி பேசுவதற்கு அலாதியான மொழி. நல்ல அழகான தமிழ் சொற்கள் விரவிக் கிடக்கும் மொழி சென்னை செந்தமிழ்.
அய்ய இன்னா.. என்று சாதாரணமாக சொல்லிவிட்டால் கூட போதும். உடனே எதிரில் இருப்பவர் இளக்காரமான ஒரு பார்வை பார்த்து கேட்பார்கள் நீ என்ன மெட்ராசா.. என்று. அவ்வளவு மரியாதை சென்னை செந்தமிழுக்கு..
சென்னையில் வந்து கால் பதிக்காத அயல்நாட்டுக்காரர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். டச்சு, போர்ச்சுகல், பிரெஞ்சு, இங்கிலாந்து, ஐரோப்பியர்களின் வருகைக்கு முன் அரேபியர்கள், சீனர்கள் என யார் வந்தாலும் சென்னையை தொடாமல் சென்றதில்லை. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். வங்காள விரிகுடாவின் விரிந்த பகுதியைக் கொண்டது சென்னை என்று.
மத்தவங்க பாஷை
இத்தனை நாட்டுக்கார்கள் சென்னைக்கு வந்து சென்றதும், ஆட்சி செய்து சென்றதும் போனதால் ல் பல மொழிச் சொற்களை சென்னையில் கலந்திருக்கும். அதனையும் தமிழ் போலவே பாவிப்பார்கள் சென்னை தமிழர்கள். அது வேறுமொழி சொல் என்பது அவர்களுக்கு தெரியாததுதான் இந்த மொழியின் சிறப்பே.
துன்னு..
பாத்துகினு நிக்கிற துன்னு.. என்று தெரு முனையில் இட்லி கடை வைத்திருக்கும் அம்மா தட்டில் இட்லியை வைத்து சர்வ சாதாரணமாக சொல்வார். துன்னு என்பதை கேட்டாலே வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பலருக்கு இட்லி சாப்பிடுவதற்கு பதில் வாந்திதான் வரும் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். துன்னு என்பது ‘தின்' என்ற அழகிய தமிழ்ச் சொல்லின் வழக்குச் சொல். "என்னை தீ அள்ளி தின்னச் சொல் தின்பேன் என்று வைரமுத்து கவிதையை ‘டுயட்' திரைப்படத்தில் பிரபு வாசித்தால் கை தட்டி ஆராவாரம் செய்பவர்கள் சென்னைக்காரர் சொன்னால் சிரிக்கிறார்கள். என்ன செய்ய?
குந்து..
ஊட்டுக்கு வந்ட்டு நின்னுனுகிற.. குந்து.. என்று சொல்லிவிட்டால் போதும், என்ன உட்கார் என்று சொல்லம்தானே என்பார்கள். தாய் மொழி என்பது தானாய் வருவது. உட்கார் என்ற சொல்லை விட இலக்கிய தரமும், அழகும் கொண்டது குந்து என்ற சொல்.. அதனால்தான் நமது பாவேந்தர் பாரதிதாசன் "காற்று குந்திச் சென்றது; மந்தி வந்து குந்தி" என்று குந்து, குந்தி என்ற சொற்களை அழகாக தனது கவிதைகளில் பயன்படுத்தி இருப்பதை காணலாம்.
எங்களாண்ட சொன்னா..
சென்னையில் பேசப்படும் மொழி இங்கு வாழும் அடித்தட்டு மக்களின் மொழியாக கருதப்படுகிறது. அதனால்தான் கிண்டல் செய்யப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் அது அந்தந்த ஊரின் ஆதிக்க சமூகங்களால் பேசப்படும் மொழியாக உள்ளது. சென்னை தமிழ் மட்டும்தான் இங்குள்ள அடித்தட்டு மக்களின் செம்மொழியாக இருக்கிறது. அதனால்தான் இழிவாக பார்க்கப்படுகிறது.
கொசுறு இருக்கு..
கொசுறு (கொஞ்சம்), மெர்சலு (மிரட்டல்), வலிச்சிகினு (வலித்தல், இழுத்தல்) ஊட்டாண்ட (வீட்டின் அண்டையில், அருகில்,) இப்படி நிறைய நல்ல தமிழ் சொற்களை சென்னை தமிழில் அடுக்கிக் கொண்டே போகலாம். பேச பேச இன்னும் இன்னும் அழகு கூடிக் கொண்டே போகும்.
இஸ்துக்கினு..
சென்னை மொழியில் ஒரு வேகம் இருக்கும். சென்னை மக்களின் உழைப்பு சார்ந்த வேகம் அது. ஒரு ரிக்ஷாகாரரிடம் பேசினால்தான் அது புரியும். அவரின் உழைப்பிற்கும் அவர் மொழியில் உள்ள ரிதம், வேகம் அனைத்தையும் இணைத்து ரசிக்க முடியும்.
சும்மாங்காட்டியும்..
சாவி, துட்டு, நைனா, படா பேஜார் இந்த சொற்களில் எதுவுமே தமிழ் இல்லைதான். ஆனால் இதை எல்லாம் தமிழ் இல்லை என்று புத்திசாலி போல் சென்னை தமிழர்களிடம் சொன்னால் செர்த்தா போப்பா.. இத சொல்ல வந்துகின என்று சிரிப்பார்கள். அதுதெல்லாமே அவர்களுக்கு தமிழ். அவ்வளவுதான்.