அதிமுக அணிகள் இணைப்பை விரும்பவில்லையா பாஜக தலைமை? பின்னணி இதுதான்
சென்னை: அதிமுக இணைப்பால் தங்களுக்கு எந்த ஆதாயமும் இல்லை என பாஜக நினைப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா தி.மு.கவின் அணிகளுக்குள் நடக்கும் சண்டையை இயல்பாக கவனித்து வருகிறது பா.ஜ.க தலைமை. ' அணிகளை இணைப்பதால், தமிழகத்தில் பா.ஜ.கவின் நோக்கம் நிறைவேறும் என்பது வெறும் நம்பிக்கைதான். மாறாக, இரட்டை இலை சின்னம் மொத்தமாக முடக்கப்பட்டால், அ.தி.மு.கவின் வாக்கு வங்கி உடையும். அதன்மூலம், பா.ஜ.கவுக்கான வாக்கு சதவீதத்தை அதிகரிக்கலாம்' எனக் கணக்கு போடுகின்றனர் பா.ஜ.க தலைவர்கள்.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவியேற்பு விழாவுக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்துப் பேசினார். நீட் தேர்வு உள்பட தமிழக வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகப் பேசினார் என ஊடகங்களில் செய்தி வெளியானாலும், அணிகள் இணைப்பில் உள்ள தடங்கல்கள் குறித்து விவரித்ததாகவும் அ.தி.மு.க வட்டாரத்தில் இருந்து செய்தி பரவியது.
அமித்ஷா சுற்றுப் பயணம்
இன்னும் சில நாட்களில் தமிழகத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா. இந்தப் பயணத்தின்போது, பா.ஜ.கவை வலுப்படுத்துவது குறித்து அவர் விவாதிக்க இருக்கிறார். இதுகுறித்து பா.ஜ.கவின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்.
தினகரன் கோபம்
"அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் பா.ஜ.க சொல்வதைக் கேட்டு செயல்படுகின்றன. மோடியை எதிர்க்கும் முடிவுக்கு வந்துவிட்டார் தினகரன். ஆட்சிக் கலைப்பு என்ற அஸ்திரத்தை வைத்து எடப்பாடியை வளைக்கும் முடிவில் தினகரன் இருக்கிறார். தொடக்கத்தில், ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸை கை குலுக்க வைக்கும் வேலைகளில் பா.ஜ.க பிரமுகர்கள் ஆர்வம் காட்டினர். நேற்று வெங்கய்யா நாயுடு பேசும்போதும், ' ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஒற்றுமையுடன் இருந்தீர்களோ, அப்படி இருந்து கழகத்தை வழிநடத்துங்கள்' என அறிவுறுத்தினார். நாயுடுவின் அறிவுரை என்பது, பா.ஜ.க தலைமையின் எண்ணம் கிடையாது" என விவரித்தார்.
ஒதுக்கி வைத்த ஜெயலலிதா
" 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போதும் 2016 சட்டமன்றத் தேர்தலின்போதும் பா.ஜ.கவை ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. தனி ஆளாக அ.தி.மு.கவின் வாக்கு வங்கியை உயர்த்திக் காட்டினார். 'பிரதமருடன் நட்பில் இருப்பதால், இயல்பாகவே அ.தி.மு.கவுடன் கூட்டணி அமையும்' என நம்பியிருந்த பா.ஜ.க தலைவர் ஏமாந்து போனார்கள். இந்த அவமானத்தையும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
தினகரன் அதிரடி
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் ஆட்சி மறைமுகமாக நடந்தாலும், அடுத்து வரக் கூடிய நாட்களை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளனர். 'ஒற்றைத் தலைமையின்கீழ் அ.தி.மு.க இருக்க வேண்டும்' என அமித் ஷா நினைக்கிறார். அப்படி தலைமை பதவிக்கு வருபவர் பா.ஜ.க ஆதரவு நபராக இருக்க வேண்டும். கடந்த சில நாட்களாக தினகரனின் அதிரடிகளால் ஆட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுநாள் வரையில் அமைதியாக இருந்துவிட்டு, மீண்டும் சசிகலா குடும்பத்தை நோக்கி அ.தி.மு.க நிர்வாகிகள் நகர்ந்தால், பா.ஜ.கவுக்கான கூட்டணி வாய்ப்பு அடிபட்டு விட வாய்ப்பு இருக்கிறது.
இரட்டை இலை முக்கியம்
கடந்த ஓரிரு நாட்களாக பா.ஜ.கவுக்கு எதிராக நமது எம்.ஜி.ஆரில் கடுமையான விமர்சனக் கவிதைகள் வெளியாகி வருகின்றன. அதிமுகவினரை ஒற்றுமைப்படுத்தி, அதன் மூலம், இரட்டை இலையைப் பெற்றுக் கொடுத்தால், நாளைக்கு எங்களுடன் வருவார்கள் என்பதில் எந்த நிச்சயமும் இல்லை. பா.ஜ.கவுக்கு எதிராக செல்லக் கூடிய வாய்ப்புகளும் அதிகம். மாறாக, இரட்டை இலை சின்னத்தை ஒரே அடியாக முடக்கிவிட்டு, பா.ஜ.கவை வலிமைப்படுத்தும் வேலைகளைத் தொடங்க இருக்கிறார்கள்.
வாக்குகள் கிடைக்கும்
அண்ணா தி.மு.கவின் வாக்குகள் சிதறும்போது, பா.ஜ.கவுக்கு ஓரளவு வாக்கு சதவீதம் கிடைக்கும் எனக் கணக்கு போடுகிறார் அமித் ஷா. இதற்காக சிறு கட்சிகளை பா.ஜ.கவுக்குள் கொண்டு வரும் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார். ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைப்பை டெல்லியே விரும்பவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை. இவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு வீழ்வார்கள் என்றுதான் பா.ஜ.கவினர் நினைக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் விடுவிக்கப்பட இப்போதைக்கு வாய்ப்பு இல்லை" என்றார் அதிரடியாக.