ராமேஸ்வரத்தில் கலாம் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு
ராமேஸ்வரம் : மறைந்த அப்துல் கலாம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உறவினர்களின் கோரிக்கையை ஏற்று அப்துல் கலாம் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, மாநில அரசின் ஒத்துழைப்புடன் அதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செய்து வருகிறது. நாளை (29-07-2015 ) மதியம் 1 மணிக்கு கலாம் உடல் ராமேஸ்வரம் வந்து சேருகிறது.
அதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். இரவு 7 அல்லது 8 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவார்கள். அதைத் தொடர்ந்து மறுநாள் (வியாழன்) காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக கலாம் உடல் வைக்கப்படும் இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான் உடல் வைக்கப்படும் என்று குடியரசுத் தலைவர்கள் மாளிகை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஆட்சியர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.