அழகிரியின் ஒப்புதலோடு தான் பாஜகவில் இணைந்துள்ளேன்: நெப்போலியன்
சென்னை: அழகிரியின் ஒப்புதலோடேயே பாஜகவில் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் திமுகவில் இருந்து விலகிய நடிகர் நெப்போலியன்.
தனது 16 வயது முதல் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக திமுகவில் அங்கம் வகித்து வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. பதவிகளை வகித்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்தவர். ஆனால், சமீப காலமாகவே திமுக நிகழ்வுகளை விட்டு நெப்போலியன் விலகியே இருந்தார்.
திமுகவில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் இவர். அழகிரியின் நீக்கத்தைத் தொடர்ந்து கட்சிப் பணிகளில் இருந்து சற்று விலகியே இருந்தார் நெப்போலியன். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கூட, திமுக சார்பில் போட்டியிட ‘சீட்' கேட்டு அவர் விண்ணப்பிக்கவில்லை.
இந்நிலையில், நேற்று திமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை தியாகராயர் நகரில் பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் நெப்போலியன் இன்று பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய நெப்போலியன், திமுக மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அப்போது அவர் கூறியதாவது :-
தி.மு.க.,வின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. தி.மு.க.,வில் ஜனநாயகம் இல்லை. மத்திய இணை அமைச்சராக என்னை செயல்பட விமாலல் எனது கைகள் கட்டப் பட்டிருந்தன. கட்சி உறுப்பினர் சேர்க்கையில் குளறுபடி நடந்து வருகிறது. மு.க.அழகிரியின் ஒப்புதலோடு தான் நான் தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன்,' எனத் தெரிவித்தார்.