22% ஜிஎஸ்டி வரியால் நெசவாளர்களுக்கு கடும் கஷ்டம்.. காஞ்சியில் இன்று கடையடைப்பு!
பட்டு ரகங்களுக்கு ஜிஎஸ்டியில் 22 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளதால் விற்பனை பாதிக்கப்படுவதை கண்டித்து காஞ்சிபுரத்தில் இன்று கடையடைப்பு நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் : ஜிஎஸ்டி வரியை கண்டித்து காஞ்சிபுரத்தில் பட்டு சேலை விற்பனையாளர்கள் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கியத் தொழிலான நெசவுத் தொழில் ஆன்லைன் வர்த்தகத்தாலும், மூலப்பொருட்கள் விலை உயர்வாலும், போலி பட்டுப்புடவைகள் வரத்தாலும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்த நெசவுத்தொழிலில் இன்று சுமார் 20 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே செய்கின்றனர். விவசாயத்துக்கு அடுத்தபடியாக குறைந்த முதலீட்டில் அதிக பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாக கைத்தறி நெசவுத் தொழில் இருந்து வருகிறது.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கைத்தறி நெசவுத் தொழிலை மட்டுமே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். கைத்தறித் தொழிலின் மூலப் பொருட்களான கச்சாப்பட்டு, தூய தங்க சரிகை, கோரா உள்ளிட்ட பொருட்களின் மீது வரி விதிப்பால் நெசவுத் தொழிலுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டு சேலைகளின் விலையும் கணிசமாக உயரும். ஏற்கனவே சில தனியார் பட்டு உற்பத்தியாளர்களின் போலி பட்டு சேலைகளாலும், ஆன்லைன் வர்த்தகத்தாலும் நெசவுத்தொழில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. மேலும் இத்தொழிலை நம்பியுள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் பட்டு சேலைக்கு 5 சதவீதம், கோரா பட்டுக்கு 5 சதவீதம், ஜரிகைக்கு 12 சதவீதம் என 22 சதவீதம் வரி செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. சாதாரண காஞ்சிப்பட்டு 30 ஆயிரம் ரூபாய் என்றால் ஜிஎஸ்டி வரியுடன் சேர்ந்தது வாடிக்கையாளர் 6 ஆயிரத்து 600 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டி வரும் இதனால் பட்டு விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.