கடலில் விழுந்த ஜிஎஸ்எல்வி ”கேர்” – கடற்படை மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைத்தது!
சென்னை: விண்வெளிக்கு மனிதனை ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு, ஜிஎஸ்எல்வி மார்க 3 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட கப் கேக் வடிவிலான கேர் என்ற உபகரணம் பத்திரமாக கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து கடலில் விழுந்த "கேர்" விண்கலம் கடற்படையால் மீட்கப்பட்டு இஸ்ரோவிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று காலை இஸ்ரோவால் வெற்றிகரமாக சோதித்துப்பார்க்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டுடன் 3 பேர் தங்கும் வசதியுடன் கூடிய "கேர்" விண்கலம் இணைக்கப்பட்ட்டிருந்தது.
இதில் மனிதன் உயிர்வாழ்வதற்கான அனைத்து அம்சங்களும் பொருத்தப்பட்டிருக்கும். இதன் எடை 3,735 கிலோ. 2.7 அகலமும், 3 மீட்டர் உயரமும் கொண்டது. இது கடலில் விழும் போது அதன் வேகத்தை கட்டுப்படுத்த 2 பாராசூட்களும் பொருத்தப்பட்டு இருந்தன.
126 கிலோ மீட்டர்கள் ராக்கெட் பயணித்து சோதனை வெற்றியடைந்ததை அடுத்து இப்பகுதி அந்தமான் கடல்பகுதியில் விழச்செய்யப்பட்டது. மேற்கொண்டு ஆய்வுகளுக்காக அப்பகுதி கடற்படையால் மீட்கப்பட்டு இன்று இஸ்ரோ தலைமை அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது.