திமுக வெற்றி பெற்றால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணை நடத்தப்படும்: ஸ்டாலின் உறுதி
சென்னை: திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை திருவான்மியூர் அருகே உள்ள ராஜீவ்காந்தி திடலில் அதிமுக, பாமக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 5,000 பேர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியில் இணைந்தவர்களை வரவேற்றார்.
அப்போது பேசிய ஸ்டாலின், வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. அனைத்து தரப்பினரும் ஆட்சியை மாற்றிட வேண்டும். ஏற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். கடந்த நாலரை ஆண்டு கால ஆட்சியில் ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் நடைபெற வில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில், சென்னையில் வெள்ளம் தானாக ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி முறையான அறிவிப்போடு திறக்கப்பட்டிருந்தால் வெள்ளம் ஏற்பட்டிருக்காது. வெள்ளம் குறித்து எல்லாக் கட்சித் தலைவர்களும் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் அதிமுக அரசு அதை பற்றி கண்டுகொள்ளவில்லை.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், முறைகேடுகள் குறித்த விசாரணையில் இருந்து யாரும் தப்பமுடியாது என தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கதை சொல்லுவது போன்று தி.மு.க.வை பற்றி ஜெயலலிதா பேசி உள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், அவருக்கு தைரியம் இருந்தால் திமுக என்ற பெயரை சொல்லி கதை சொல்லியிருக்கலாமே என கேள்வி எழுப்பினார்.